Friday 24 March 2017


பெரம்பலூர் அருகே தனலெட்சுமி ஸ்ரீநிவாசன் - ரோவர்  கல்லூரி பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர். போட்டி போட்டுக்கொண்டு பஸ்கள் சென்றதால் விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தனியார் கல்லூரிகளின் பஸ்கள்
பெரம்பலூர் அருகே துறையூர் மெயின்ரோட்டில் தனலெட்சுமி ஸ்ரீநிவாசன் கல்லூரி உள்ளது. இதேபோல் பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் ரோவர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிகளில் குன்னம் தாலுகாவிற்கு உட்பட்ட துங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை அந்த பகுதிகளை மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு 2 கல்லூரிகளின் பஸ்களும் பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்தன.
பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் பகுதியில் உள்ள அருமடல் பிரிவு ரோட்டில் தனலெட்சுமி ஸ்ரீநிவாசன் கல்லூரி பஸ் நின்று மாணவ, மாணவிகளை ஏற்றியது. பின்னர் அங்கிருந்து பஸ் புறப்பட்டபோது, பின்னால் வந்த ரோவர் கல்லூரி பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோதிய பஸ்சின் முன்புறத்தில் அமர்ந்திருந்த மாணவிகள் சிலர், கண்ணாடியை உடைத்து கொண்டு கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். மேலும் சில மாணவ, மாணவிகள் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர்.
மாணவ, மாணவிகள் படுகாயம்
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் அங்குசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயமடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே சம்பவ இடத்தில் நின்ற 2 பஸ்களையும் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பெரம்பலூர் அருகே துறையூர் ரோட்டில் உள்ள ஸ்ரீநிவாசன்க கல்லூரியில் படிக்கும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பெரியவெண்மணியை சேர்ந்த மணிகுயில்(வயது 20), புதுவேட்டக்குடியை சேர்ந்த கவுசல்யா(19), நல்லறிக்கையை சேர்ந்த செல்வராணி (20), கோவில்பாளையத்தை சேர்ந்த அறிவுக்கொடி (20) உள்ளிட்ட மாணவ, மாணவிகள் மற்றும் தண்ணீர்பந்தலில் உள்ள ரோவர்  கல்லூரியில் படிக்கும் சின்னவெண்மனியை சேர்ந்த சாத்தபிள்ளை (20), காரைப்பாடியை சேர்ந்த மாயவேல் (20) உள்பட 10–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விபத்தில் படுகாயம் அடைந்திருப்பதும், மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதற்கிடையே பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சிலர் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பதறி அடித்து கொண்டு ஆஸ்பத்திரிகளுக்கு ஓடி வந்தனர். மாணவ, மாணவிகள் அங்கு நலமுடன் இருப்பதை கண்ட பின்னரே அவர்கள் நிம்மதியடைந்தனர். விபத்தில் காயடைந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தினர் ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தினர்.
இதற்கிடையே பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாணவ, மாணவிகளை நேரில் பார்வையிட்டு பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவகுமார் விசாரணை நடத்தினார். விபத்து குறித்து தனியார் கல்லூரி பஸ்களின் டிரைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 2 டிரைவர்களும் போட்டி போட்டுக்கொண்டு முந்தி செல்ல முயன்றதால் விபத்து ஏற்பட்டதா? என்கிற கோணத்திலும் போலீசார் விசாரித்தனர்.
டிரைவர் கைது
இதனை தொடர்ந்து பெரம்பலூர்– துறையூர் ரோட்டில் உள்ள ஸ்ரீநிவாசன்க கல்லூரியின் பஸ் டிரைவர் குன்னம் தாலுகா காரைப்பாடியை சேர்ந்த ராஜதீரனை(27) மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மற்றொரு பஸ்சின் டிரைவரான நம்மக்கோணம் பகுதியை சேர்ந்த சூரியநாராயணன் (30) போலீசாரிடம் கூறுகையில், அருமடல் பிரிவு ரோடு பகுதியில் மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு பஸ்சை எடுத்தபோது குறுக்கே மற்றொரு இருசக்கர வாகனம் வந்ததாகவும், இதனால் திடீரென பிரேக் போட்டவுடன் பின்னால் வந்த பஸ் மோதிவிட்டதாகவும், தெரிவித்தார். 2 கல்லூரி பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் மாணவ, மாணவிகள் படுகாயமடைந்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:

Post a Comment