Tuesday 15 November 2016


புதுடில்லி: ஜாகிர் நாயக்கின் என்.ஜி.ஓ., அமைப்பான ‛இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேசன்' க்கு 5 ஆண்டு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பரப்புரை


முஸ்லிம் மதபோகரான ஜாகிர் நாயக்கின் பீஸ் டி.வி., தொலைக்காட்சி மற்றும் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டசேன் எனப்படும் என்.ஜி. ஓ. வை நடத்தி வருகிறார். பீஸ் டி.வி., மூலம் ஜாகிர் நாயக் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக பரப்புரை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. சமீபத்தில் வங்க தேசத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுப்பட்ட பயங்கரவாதி ஒருவன் ஜாகிர் நாயக்கின் பேச்சால், தான் அதிகம் கவரப்பட்டதாக கூறினான். இதையடுத்து, விசாரணை நடத்திய வங்கதேச அரசு பீஸ் டி.வி., ஒளிப்பரப்பிற்கு தடை விதித்தது.

உள்துறை அமைச்சகம் விசாரணை


அதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது. ஜாகிர் நாயக்கின் பேச்சுகள், அமைப்பின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. இந்நிலையில், விசாரணையின் முடிவில் அவரின் ‛இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேசன்' எனப்படும் என்.ஜி.ஓ., அமைப்புக்கு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் நிதி வருவது ஆதாரப்பூர்வ தெரியவந்தது. மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக, உளவுத் துறை அளித்துள்ள பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் 5 ஆண்டு தடை விதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது.

அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை


இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டில்லியில் இன்று நடந்தது. அந்த கூட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக வெளிநாட்டிலிருந்து நிதி பெற்றது, பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்தது போன்ற காரணங்களுக்காக ஜாகிர் நாயக்கின் அமைப்புக்கு தடை விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

5 ஆண்டு தடை விதிக்க முடிவு


ஆலோசனையின் முடிவில் சட்ட விரோதமாக வெளிநாட்டு நிதிகள் பெற்றதற்காக 5 தடை விதிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. vkalathur v.kalathur.

-தினமலர் 

0 comments:

Post a Comment