Saturday 1 February 2014



 பெரம்பலூர் நகரில் நடைபெற்றுவரும் புத்த்ககத் திருவிழா வில்  நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளை நாம் நேரடியாக காண முடியவில்லை என்றாலும்
பத்து நாட்கள் நடைபெறுகின்ற நிகழ்ச்சியின் உடனுக்குடன் பதிவு செய்ய படுகிறது ...

பெரம்பலூர் மாவட்ட மக்கள் பயனடையவும் , நிகழ்வுகளை கண்டு மகிழவும் ... இந்த மிக சிறந்த ஏற்பாட்டை விழா குழுவினர் ஏற்பாடு செய்து உள்ளனர் .....

பெரம்பலூர் திருவிழாவின் நிகழ்வுகளை பார்க்க தவறியவர்கள், பார்க்க முடியாதவர்கள் கீழே உள்ள முகவரியில் சென்று பார்க்கலாம் ...  



https://www.youtube.com/user/PerambalurBookFair 


மேலும் இதற்கென தனி இனையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிநிரல்களை காணலாம். 


www.perambalurbookfair.in.

Friday 31 January 2014

புதுடில்லி: நாட்டின் உயரிய, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகளை, அரசியல்வாதிகளான ஆட்சியாளர்கள், இஷ்டத்திற்கு, இடமாற்றம் செய்து, தூக்கியடிக்கும் நிர்வாக சீர்கேட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள், அதே பணியிடத்தில் பணியாற்ற வேண்டும். அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென்றால், அதற்கென, ஒவ்வொரு மாநிலத்திலும் நியமிக்கப்பட உள்ள, 'சிவில் சர்வீசஸ் போர்டு' அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கைப்பாவைகளாக:

அரசியல் காரணங்களுக்காக, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், ஆட்சியாளர்களால் அடிக்கடி இடமாற்றம், பணியிடை மாற்றம் போன்ற தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தனர். மெத்தப்படித்த இத்தகைய அதிகாரிகளை, போதிய கல்வியறிவு இல்லாத, சாதாரண படிப்பு படித்த, அரசியல்வாதிகளாக இருந்து, ஆட்சியாளர்களாக மாறியவர்கள், தங்களின் கைப்பாவைகளாக பயன்படுத்தி வந்தனர். நியாயமான, நேர்மையான அதிகாரிகளை பந்தாடுவது, அவர்களை, 'சஸ்பெண்ட்' செய்வது என, சொல்லொண்ணா துயரங்களுக்கு, இந்த அதிகாரிகள் ஆளாகினர். இதற்கு உதாரணமாக, ஒவ்வொரு மாநிலத்திலும், பல அதிகாரிகள் உள்ளனர். தமிழகத்தில், சகாயம் போன்றவர்களும், உ.பி.,யில், துர்காசக்தி நாக்பால், அரியானாவில், அசோக் கெம்கா போன்றோர், ஆட்சியாளர்களால் துன்புறுத்தப்பட்டனர்.

இத்தகைய சீர்கேட்டை சரி செய்ய வேண்டும் என, ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 87 பேர், சுப்ரீம் கோர்ட்டில், கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், பொதுநலன் கோரும் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட், 'ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும். அவர்களின் பணியிட மாற்றம், ஒழுங்கு செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட காலம், குறிப்பிட்ட இடத்தில் அவர்கள் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான, பணி வரன்முறைகளை, இன்னும், மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு அறிவிக்க வேண்டும்' என, அதிரடியாக உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் அளித்திருந்த காலக்கெடு, நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அவசர அவசரமாக, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை, நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன:


* ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகள், அவர்கள் பணியாற்றும் பணியிடங்களில், குறைந்தபட்சம், இரண்டாண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும்.

* அவர்களை இடமாற்றம் செய்வது, தண்டனை வழங்குவது, பணிஉயர்வு வழங்குவது போன்றவற்றை, அதற்கென அமைக்கப்பட வேண்டிய, சிவில் சர்வீசஸ் போர்டு தான் மேற்கொள்ள வேண்டும்.

* அந்த குழுவிற்கு, மூத்த, சீனியர், கூடுதல் தலைமை செயலர் அல்லது தலைவர், தலைமை வகிக்க வேண்டும். வருவாய் வாரியம் அல்லது நிதித்துறை கமிஷனர் அல்லது அதற்கு சமமான அந்தஸ்து கொண்ட அதிகாரி, அதன் உறுப்பினராக இருக்க வேண்டும்.

* இந்த குழுவின், உறுப்பினர் செயலராக, முதன்மை செயலர் அல்லது மாநில அரசின், பணியாளர் நலத்துறையின் செயலர் இருக்க வேண்டும்.

* ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பணியிட மாற்றம், பதவி உயர்வு, கூடுதல் பொறுப்பு போன்றவற்றை, இந்த குழுவில், கூடுதலாக நியமிக்கப்படும், உள்துறையின் செயலர் அல்லது முதன்மை செயலர் மற்றும் டி.ஜி.பி., மேற்கொள்வார்.

* அது போல், ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் விவகாரத்தையும், சிவில் சர்வீசஸ் போர்டில், இது போல், கூடுதலாக நியமிக்கப்படும், இரு அதிகாரிகள் மேற்கொள்வர்.

* எந்த பணியிடத்திலும், குறைந்தபட்சம், இந்த அதிகாரிகள், இரண்டாண்டுகள் பணியாற்ற வேண்டும். பதவி உயர்வு, பணி ஓய்வு, பயிற்சி போன்ற நியாயமான காரணங்கள், போர்டால் ஏற்றுக் கொள்ளப்படும்.

* அதிகாரிகள் மீதான, எந்த நடவடிக்கைக்கும், சிவில் சர்வீசஸ் போர்டின் ஒப்புதல் அவசியம். எனினும், தகுந்த ஆணையம், இந்த போர்டின் பரிந்துரையை நிராகரிக்கலாம்.

* இரண்டாண்டுகளுக்குள் அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டி வந்தால், அவரின் விருப்பம் அவசியம்.

* இந்த போர்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, அறிக்கை அளிக்க வேண்டும். அதில், தன் செயல்பாடுகளை வெளிப்படையாக பட்டியலிட வேண்டும். இவ்வாறு, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது முதற்கட்டம் தான்:

மத்திய அரசின் இந்த முடிவு, காலம் தாழ்ந்து வந்துள்ள போதிலும், அதை, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.ஸ்., அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். வழக்கு தொடர்ந்த, தமிழகத்தை சேர்ந்த, முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரி, டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் இது குறித்து கூறுகையில், ''இது முதற்கட்டம் தான். இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. லோக்பால் உட்பட பல முக்கியமான துவக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறந்த நிர்வாகத்திற்கான துவக்கம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

நன்றி-தினமலர்.
புதுடில்லி: பான் கார்டுக்காக விண்ணப்பிப்பவர்களிடம் பழைய நடைமுறையையேதொடர நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையில் பான் கார்டு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப பாரத்துடன் அதற்கானதொகை மற்றும் சான்றிதழ்களின் நகலை மட்டும் காட்டினால் போதுமானதாக இருந்தது.ஆனால்தற்போது குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அதனுடன் ஒரிஜினல் சான்றிதழ்களையும் அனுப்பி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல்வேறு தரப்பில் எழுந்த கண்டனத்திற்கு பி்னனர் இந்த புதிய உத்தரவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் , பழைய முறையையே நடைமுறைப் படுத்தப்படும் எனவும் நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நன்றி-தினமலர்.
புதுடில்லி: இதர பிற்படுத்தப்பட்டோர் எனப்படும், ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில், மேலும், 60 ஜாதிகளை சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், 2,343 ஜாதிகள், துணை ஜாதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஜாதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி பயிலும் போதும், வேலையில் சேரும் போதும், குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால், நாடு முழுவதும் உள்ள இந்த பிரிவினரை திருப்திபடுத்தும் விதத்தில், மேலும், 60 ஜாதிகளுக்கு, ஓ.பி.சி., அந்தஸ்து வழங்க, மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் பரிந்துரையை அடுத்து, பிரதமர் தலைமையில் நேற்று கூடிய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் நேற்று வழங்கப்பட்டது

நன்றி-தினமலர்.

Thursday 30 January 2014


புதுடில்லி: சமையல் காஸ் சிலிண்டர் விநியோகத்தில் ரேசன் முறை கொண்டு வந்தது கடும் எதிர்ப்பை சந்தித்து வந்தது. இந்நிலையில் மான்யவிலை காஸ் சிலிண்டர் எண்ணிக்கை 12 ஆக உயர்த்த வேண்டும் என்ற ராகுலின் கோரிக்கைக்கு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் முறைப்படி ஒப்புதலை வழங்கியது.

இதற்கான அறிவிப்பை இத்துறைக்கான அமைச்சர் வீரப்ப மொய்லி அறிவித்தார். இவரும் அமைச்சர் மணீஷ் திவாரியும் இணைந்து நிருபர்களிடம் கூறியதாவது:

நியாயமான கோரிக்கை: ராகுலின் கோரிக்கை நியாயமானது. இவர் மக்கள் பிரதிநிதி. அவர் ஒன்றை சொல்கிறார் என்றால் அதில் ஆழ்ந்து கவனம் செலுத்த வேண்டும். இதனடிப்படையில் தான், இந்த விஷயம் பரிசீலித்து, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மானியத்துடன் ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் என வழங்கப்பட்டது. இனி 12 சிலிண்டராக வழங்கப்படும். மாதம் ஒரு சிலிண்டர் வீதம் பெற்று கொள்ளலாம். பிப்ரவரி 1 முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

மான்யவிலை சிலிண்டர்களால் ஏற்கனவே அரசுக்கு 80 ஆயிரம் கோடி செலவு இருந்து வந்தது. 12 ஆக உயர்த்துவதன் மூலம் அரக்கு கூடுதலாக 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். ஆதார் திட்டம் மூலம் மானியம் பெறுவது குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்படும். தற்போது ஆதார் அட்டை மூலம் காஸ் பெறுவது, ஆதார் மூலம் மானியம் பெறுவது முறையாக அமல்படுத்தப்படவில்லை. இவ்வாறு அமைச்சர்கள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ராகுல் பேசுகையில்; பிரதமர் ஜி மக்களுக்கு வழங்கும் 9 சிலிண்டரை 12 ஆக உயர்த்துங்கள் என்று ஓப்பனாக கோரிக்கை வைத்தார்.

நன்றி-தினமலர்

Wednesday 29 January 2014


கடந்த 2013 ஜனவரி மாதம் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் “பதவி அதிகாரம் என்பது விஷம் என்று நான் காங்கிரஸ் துணைத் தலைவராக பதவி ஏற்ற பின் என் தாய் என்னிடம் வருத்தப்பட்டு தெரிவித்தார்” என்று உணர்ச்சிப் பூர்வமாகப் பேசியிருந்தார் ராகுல் காந்தி.  அதை தலைப்புச் செய்தியாகவே வெளியிட்டு மகிழ்ந்தன 24 மணி நேர செய்தி அலைவரிசைகளும் ஆங்கில ஊடகங்களும்.
அதுகுறித்து  மேலும் விளக்கிய அவர்,  “பதவி அதிகாரம் என்பது விஷம் தான். பதவி அதிகாரத்தால் சூழ்ந்து கொள்ளும் ஆபத்துக்ளை கையாளத் தெரியாமல் போகும் போது அது விஷமாகிறது. மேலும், அதிகாரத்தை பொதுநலத்திற்காக பயன்படுத்தாமல் சுயநலத்துக்காகப் பயன்படுத்தினால் அது விஷமாகும் என்றார்.  இதைப் போன்ற தன்னிலை விளக்கத்தை வேறு எவராலும் அளிக்க முடியாது


மாறியதேனோ?
மேடையின் பின்புறம் யோகேந்திர யாதவ் (இப்போது இவரும் ஆ.ஆ.க.க்கு மாறிவிட்டார் போன்ற அறிவுக்கொழுந்துகள் எழுதிக் கொடுத்ததை ஆராயாமல் பேசிய ராகுலுக்கு, இப்போது உண்மை விளங்கியிருக்கும். இத்தனைக் காலம், காங்கிரஸ் கட்சியின் உச்சபட்ச அதிகார மையமாக இருந்தும், அதிகாரத்தால் சூழ்ந்து கொள்ளும் ஆபத்துகளை கையாளத் தெரியாமல் பரிதவித்த தனது இயலாமையை எண்ணி இப்போது அவர் உள்ளூற கண்ணீர் சிந்தக்கூடும்.
சொந்தச் சகோதரியின் கணவர் ராபர்ட் வதேரா ஹரியானாவில் நிலபேர ஊழலில் பலகோடி கபளீகரம் செய்ததைத் தடுக்க முடியாத ராகுலுக்கு, அப்பாவி வேடம் கூடப் பொருந்தாது. இப்போது ராகுலுக்கு உதவியாக பிரியங்காவும் (பாட்டி இந்திரா காந்தி போலவே இருப்பதாக நெக்குருகுகிறார்கள் சில மீடியா வேங்கைகள்) களம் இறங்குகிறாராம்; விளங்கிவிடும். காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் முதல் வாக்கு, அசோக் கெம்கா (இவர் தான் வதேரா ஊழலை வெளிப்படுத்தியவர்) அளிக்கும் வாக்காகத் தான் இருக்கும்!
போஃபர்ஸ் ஊழலில் தொடர்புடைய ஒட்டாவியா குவாத்ரோச்சி ரகசியமாக இத்தாலி தப்பிச்செல்ல உதவிய காங்கிரஸ் அரசை காங்கிரஸ் இளவரசரால் – அன்னையை மீறி- எப்படிக் கண்டிக்க முடியும்? 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாட்டின் கஜானா ரூ. 1.76 லட்சம் கோடி இழப்புக்கு உள்ளானதை இன்னமும் ஏற்க மறுக்கும் அதி தீவிர கொள்கைப் பிடிப்பாளர் ராகுல். இவரால், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளில் நேரிட்ட ரூ. 1.86 லட்சம் கோடி இழப்பை மட்டும் ஏற்க முடியுமா என்ன?
ஆனாலும், காங்கிரஸ் மட்டுமே ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதாக எந்தக் கூச்சமும் இல்லாமல் ராகுலால் மேடையில் முழங்க முடிகிறது. அதையும் எந்தக் கேள்வியும் இன்றி பத்திரிகைகளில் வெளியிட்டு மகிழ்கிறார்கள் நமது காகிதப்புலிகள். ஊழலை ஒழிக்கவும் வெளிப்படையான ஆட்சி நடத்தவும் காங்கிரஸுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்குமாறு கோருகிறார் ராகுல்.
ஆனால், அடுத்து காங்கிரஸ் வென்றால் யார் பிரதமர் என்பதை இப்போதே அறிவிக்க மாட்டோம் என்று தெளிவாக அறிவித்திருக்கிறார் சோனியா அம்மையார். பாஜக நமது அரசியல் அமைப்பு முறைக்கு மாறாக நரேந்திர மோடியை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திப்பது ஜனநாயக விரோதமென்றும் விமர்சிக்கிறாகள் காங்கிரஸ் எடுபிடிகளான திக்கி ராஜா வகையறாக்கள். தோற்கப்போகும் தேர்தலில் தனது மகனை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி மூக்குடைபட எந்தத் தாய் தான் துணிவார்? என்ற மோடியின் எள்ளலில் நியாயம் இல்லாமல் இல்லை. 

மோடிக்கு நாடு நெடுகிலும் கிடைத்துவரும் பிரமாண்டமான ஆதரவு அலையைக் கண்டு நடுங்கிப் போயிருக்கும் காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள், காங்கிரஸுக்கு வால்பிடிக்கும் ஐக்கிய ஜனதாதளம், ஆர்.ஜே.டி. போன்ற கட்சிகள், இடதுசாரிகள், மூன்றாவது அணிக் கனவில் மிதக்கும் சில்லறைக் கட்சிகள் உள்ளிட்ட பாஜக எதிரிகள் அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக மாறி இருக்கிறார் மோடி. இப்போது இந்தியா டுடே- சி வோட்டர் நிறுவனமும், சி.என்.என்.-ஐ.பி.என், சிஎஸ்டிஎஸ் நிறுவனமும் தனித்தனியே ஏபிபி நியூஸ்- நீல்ஸன் நிறுவனமும் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக-வின் வெற்றி பவனி (230/ 272) உறுதியாகி இருக்கிறது. இதையும் காசு கொடுத்து வாங்கப்பட்ட விளம்பரச் செய்தி என்று விமர்சித்திருக்கிறது காங்கிரஸ். அவரவர்களின் எண்ணப்படித் தானே அடுத்தவர்களையும் எடைபோட முடியும்? 

இப்போதைய நிலையில் மோடிக்கு நாடு முழுவதும் பெருகிவரும் ஆதரவு வரும் மாதங்களில் மேலும் பல மடங்காகும். இப்போதே நிர்கதியாக ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மதிப்பு வரும் நாட்களில் மேலும் குலையும். காங்கிரஸ் கட்சியின் இடத்தை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றக்கூடும். (பஸ்மாசூரன் கதை நினைவிருக்கிறதா?)
நிலைமை இவ்வாறிருக்கையில், பிரதமர் வேட்பாளரை  காங்கிரஸும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் எப்படி அறிவிக்க முடியும்? எனவே தான் மழுப்பல்.
இக்கூட்டணியின் தேர்தல் பிரசாரத் தலைவராக ராகுல் காந்தி இருப்பாராம். ஆனால், அவர் பிரதமர் வேட்பாளர் இல்லையாம். இப்போதைய பிரதமர் மன்மோகன் (இவரைப் போன்ற நன்றியுள்ள ஜீவனைக் காண்பது மிகவும் அரிது)   ‘அடுத்து தேர்தலில் காங்கிரஸ் வென்றாலும் பிரதமர் பொறுப்பேற்கப் போவதில்லை’ என்கிறார். காங்கிரஸ் பெயரைச் சொல்லி கொள்ளையடிக்கும் ப.சி.யோ,  ‘தேர்தலில் வென்றால் ராகுல் தான் எங்கள் பிரதமர்’ என்கிறார். ஜால்ராக்கள் அனைவரின் சத்தமும் இதுவே. ஆனால், காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக இதை அறிவிக்காதாம். நாட்டு மக்களை எந்த அளவிற்கு முட்டாள்களாக காங்கிரஸ் கருதுகிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது!
மக்களிடையே சிம்மம் போல வலம் வந்துகொண்டிருக்கும் குஜராத் முதல்வருடன் ராகுலை ஒப்பிட முடியாது என்பது காங்கிரஸுக்கே தெரிந்திருக்கிறது. எனவே தான் பல்டி. அதற்கு ஜனநாயக சாயம் வேறு பூசுகிறது.  ‘ஸ்வயமேவ மிருகேந்திரதா’- என்ற சமஸ்கிருதப் பொன்மொழி உண்டு. இதன் பொருள்- சிங்கம் வனத்தின் ராஜாவாக தானே- தன்னுடைய குணத்தினாலேயே ஆகிறது என்பது தான். மோடி என்ற சிம்ம்ம் எங்கே? ராகுல் என்ற எலி எங்கே? இடையே மூக்கை நுழைக்கும் கேஜ்ரிவால் நரி எங்கே?  


இப்போது ஜனநாயகம் பேசுகிறாரே, சோனியா அம்மையார். அவருக்கு ஒரு கேள்வி- ஜவஹர்லால் நேருவும் இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் எந்த அடிப்படையில் தொடர்ந்து இந்நாட்டில் பிரதமர்களாக இருந்தார்கள்? இந்திரா கொல்லப்பட்டவுடன் யாரைக் கேட்டு ராஜீவை பிரதமர் ஆக்கியது காங்கிரஸ்? அதை எதிர்த்து வெளியேறி தனிக்கட்சி துவங்கியவர் தானே இப்போது காங்கிரஸ் கட்சியால் ஜனாதிபதி ஆக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி? உங்களை (சோனியா) முன்னிறுத்தி 2004-ல் தனிப்பெரும் கட்சியாக வென்ற காங்கிரஸ் ஏன் மன்மோகனை பிரதமர் ஆக்கியது? அப்போதைய ஜனாதிபதி கலாம் உங்களுக்குக் கூறிய  ‘தனிப்பட்ட’ அறிவுரையாலா?
ஊழல் மலை மீது அமர்ந்துகொண்டு  ‘எங்கே ஊழல்?’ என்று குலைப்பது போலவே,  ஜனநாயக விரோதச் செயல்பாடுகளிலேயே ஊறித் திளைத்த காங்கிரஸ் இப்போது ஜனநாயகம் பேசுகிறது. நாட்டு மக்கள் ஞாபக சக்தி குறைந்தவர்கள் என்று எண்ணிவிட்டது போல. நமது மக்கள் அப்பாவிகள் தான், இந்திரா கொல்லப்பட்டபோதும் ராஜீவ் கொல்லப்பட்டபோதும் காங்கிரஸுக்கு அனுதாப அலையில் வெற்றிமகுடத்தைச் சூட்டியவர்கள் தான் அவர்கள். ஆனால், அவர்கள் மாக்கள் அல்ல. மோடி இதுவரை நடத்தியுள்ள 80-க்கு மேற்பட்ட மாபெரும் மாநாடுகளில் திரளும் மக்கள் கூட்டமே அதற்கு சாட்சி.
இப்போது,  ‘காங்கிரஸ் எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் ஏற்கத் தயார்!’ என்று அறிவித்திருக்கிறார் ராகுல். கழக செயற்குழுவும் பொதுக்குழுவும் கூடி முடிவு செய்யும் என்று அவ்வப்போது உள்கட்சி ஜனநாயகக் கொடி பிடிப்பாரே, தமிழக செம்மொழி வேந்தர் ஒருவர்- அதேபோல இருக்கிறது ராகுல் பேச்சு. மக்களால் மக்களுக்காக, மக்களை மக்களே ஆள்வதே மக்களாட்சி. இதை ராகுலும் கருணாநிதியும் வேறுவகையில் புரிந்து வைத்திருக்கிறார்கள். இந்த நாடகத்தை நாட்டு மக்களும் புரிந்துகொண்டு விட்டார்கள்!
 “மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில் அதன்பின்னர் எம்.பி.க்கள் என்னைப் பிரதமராக தேர்வு செய்ய நினைத்தால் அதுபற்றி நிச்சயம் கவனமெடுப்பேன்” என்று ஜனவரி 23-ம் தேதி நிலவரப்படி கூறி இருக்கிறார் காங்கிரஸ் துணைத் தலைவர்  ராகுல் காந்தி. இதை அவர் சொன்ன இடம் அமேதி தொகுதி. அந்த ஒரு தொகுதியிலேனும் ஜெயித்தாக வேண்டுமே? ஆ.ஆ.க.யின் குமார் விஸ்வாஸ் வேறு அங்கு வந்து ஒரு கலக்கு கலக்கிச் சென்றிருக்கிறார். இப்போதைய நிலவரப்படி காங்கிரஸ் பெறும் வெற்றியின் எண்ணிக்கை 60-ஐத் தாண்டினால் அபூர்வம். அதில் அமேதியும் ரேபரேலியும் இருந்தாக வேண்டுமல்லவா?
இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த வாக்குகளுக்காக என்னென்னவோ சர்க்கஸ் செய்தும் கடைசி நேரத்தில் ஆ.ஆ.க. அவர்களின் ஆதரவை திருடிச் சென்றுவிட்டதை தில்லியில் கண்ட காங்கிரஸுக்கு எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியவில்லை. மோடியை சிறுமைப்படுத்த மத்திய அரசு நியமித்த கமிஷனில் (இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட்தாகக் கூறப்படும் விவகாரம்) பணியாற்ற எந்த ஒரு நீதிபதியும் தயாராக இல்லை என்ற தகவல் வேறு காங்கிரஸ் கட்சியைக் கடுப்பேற்றுகிறது.
பேனுக்குப் பயந்து கொள்ளிக்கட்டையை எடுத்து சொறிந்துகொண்டது போலாகிவிட்டது தில்லியில் ஆ.ஆ.க- க்கு காங்கிரஸ் அளித்த ஆதரவு. இப்போது குதிரை குப்புறத் தள்ளி குழியும் பறிக்கிறது.
மணிமேகலை என்றெல்லாம் தன்னைப் புகழ்ந்த கலாகார் பாஜக-வுக்கு விடுத்த தூதுகளை உளவுத் தகவல்களால் அறிந்து நொந்துபோயிருக்கிறார் இத்தாலிய மணிமேகலை. உடனிருக்கும் கூட்டணித் தோழர்களோ, லாபம் வரும் வரை அறுவடை செய்துவிட்டு மூன்றாவது அணிக்குத் தாவத் தயாராக இருக்கிறார்கள். மொத்தத்தில், திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்ட சிறுகுழந்தை போல தத்தளிக்கிறார் ராகுல்.
காங்கிரஸ் கட்சிக்கு இது கஷ்ட காலம் தான். ஆனால், நாட்டிற்கு ராகு(ல்) காலம் முடிந்து நல்லகாலம் பிறந்துவிட்டது. அதன் அடையாளமாகவே காங்கிரஸின் வீழ்ச்சி தென்படுகிறது. 




ஒரு ஏக்கருக்கு ரூ.43,816-க்கு மிகாமல் நன்செய் நிலமாக இருந்தால் இரண்டரை ஏக்கர் வரைக்கும், புன்செய் நிலமாக இருதால் 5 ஏக்கர் வரைக்கும் எந்தப் பயிராக இருந்தாலும், என்ன இடைவெளியாக இருந்தாலும் விருப்பம் இருப்பின், அவருக்கு சொந்தமான பரப்பு முழுமைக்கும் சொட்டுநீர்ப் பாசனத்தை சிறு விவசாயி அமைத்துக் கொள்ளலாம்.
குறு விவசாயி நன்செய் நிலமாக இருந்தால் ஒன்றேகால் ஏக்கர், புன்செய் நிலமாக இருப்பின் இரண்டரை ஏக்கர் வரைக்கும் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கலாம். சிறு, குறு விவசாயிகள் தங்களிடம் உள்ள நிலம் முழுவதையும் 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பயன்கள்: சொட்டுநீர்ப் பாசன முறையால் நீரும் சத்துக்களும் வேரினில் கிடைக்கும்; நீரைச் சிக்கனப்படுத்தலாம்; பாசனத்துக்கு தனியாக ஆள் விடத் தேவையில்லை. இதனால் பாசன ஆள்கள் செலவு முற்றிலும் குறைகிறது.
சத்துக்கள் நேரடியாக வேருக்கு கிடைப்பதால், அவை வீணாகாமல் பயிருக்கு கிடைக்கின்றன. தழைச்சத்தை நேரடியாக மண்ணில் இடும்பொழுது இடுஉரத்தில் 30 முதல் 50 சதவீதம்தான் கிடைக்கிறது. அதையே உரப்பாசனமாக இட்டால் சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் 95 சதவீத தழைச்சத்து பயிருக்கு கிடைக்கிறது. அதேபோல் மண்ணில் நேரடியாக இடும்பொழுது 50 சதவீதம் மட்டும் கிடைக்கும் சாம்பல்சத்து சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 80 சதவீதம் கிடைக்கிறது.
குறைந்த செலவினம்: நீர் வேரை நேரடியாகச் சென்றடைவதால் களைகள் முளைப்பது குறைகிறது. களை எடுக்கும் செலவினம் பெருமளவு குறைகிறது. குறிப்பாக, களையெடுத்து மீள முடியாத வாழை சாகுபடியில் இது ஒரு வரப்பிரசாதம். களைகளின் போட்டியின்றிப் பயிர் வளர்வதால் 30 முதல் 60 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கிறது.
முன்னதாக முதிர்ச்சிக்கு வருவதால் முன்கூட்டியே கையில் காசு பார்க்கமுடியும். அடுத்த பயிர் சாகுபடியை முன்னதாகவே மேற்கொள்ளலாம். விளைபொருளின் தரமும் எடையும் பொலிவும் அதிகரிப்பதால் நல்ல விலை கிடைக்கிறது.
யார் மானியம் பெறலாம்? வருவாய்த் துறை நிலவகைப்பாட்டின்படி நன்செய் நிலம் என்றால் இரண்டரை ஏக்கருக்குள்ளும், புன்செய் நிலமாக இருந்தால் 5 ஏக்கருக்குள்ளும் சொந்த நிலம் இருப்பவர்கள் இந்த மானியம் பெறத் தகுதியானவர்கள். சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் மோட்டாருடன் கூடிய கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு போதிய நீர்ஆதாரத்துடன் இருக்க வேண்டும்.
பொதுவான நீர்ஆதாரம் கொண்ட சின்னஞ்சிறு விவசாயிகள் 2, 3 பேர் சேர்ந்தும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
தேவையான ஆவணங்கள்: பயனாளி சிறு, குறு விவசாயிகளுக்கு உரிய சான்றிதழை வருவாய் வட்டாட்சியரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். நிலத்தின் கணினிப் பட்டா, சாகுபடி செய்துள்ள அல்லது செய்யவிருக்கும் பயிர் பரப்பை சர்வே எண்கள் வாரியாக குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய அடங்கல், வயல் வரைபட நகல், இருப்பிட முகவரியைத் தெளிவாகக் குறிக்கும் ரேஷன் அட்டை நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்கள் 2 ஆகியவற்றுடன் பயனாளிகள் விண்ணப்பிக்க வேண்டும்.

நன்றி-தினமணி.


பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், பெண்களுக்கான இலவச எம்பிராய்டரி மற்றும் ஆடைகளின் அச்சுக்கலைப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மைய இயக்குநர் ஜி. பார்த்தசாரதி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், பிப். 10-ம் தேதி முதல் எம்பிராய்டரி மற்றும் ஆடைகளில் அச்சுக்கலைப் பயிற்சி  பெண்களுக்கு மட்டும் இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற 18-40 வயதிற்குள், 8-ம் வகுப்பு படித்தவராக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.
பயிற்சி காலை 10 - மாலை 5.30 மணி வரை 15 நாட்கள் நடைபெறும். பயிற்சி காலத்தில் மதிய உணவும், பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழும் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் ரெங்கா நகரில் உள்ள ஐ.ஓ.பி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328-277896 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

நன்றி-தினமணி.
பெரம்பலூர் மாவட்ட ஜவகர் மன்றம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குரலிசை, நடனம் மற்றும் ஓவியப் போட்டிகள் வியாழக்கிழமை (ஜன. 30) நடைபெற உள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை ஜவகர் மன்றம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குரலிசை, நடனம், ஓவியப் போட்டிகள் மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில், வியாழக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெற உள்ளன.
இப்போட்டிகளில் 5- 8, 9- 12, 13- 16 வயது ஆகிய மூன்று பிரிவுகளில் குரலிசை (வாய்ப்பாட்டு), நடனம், ஓவியம் ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது.
குரலிசைப் போட்டிகளில் தமிழ் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். திரைப்படப் பாடல்கள் பாட அனுமதிக்கப்பட மாட்டாது. நடனப் போட்டிகளில் பரத நாட்டியம், நாட்டுப்புற நடனங்கள் ஆகிய போட்டிகள் நடைபெறும்.
ஓவியப் போட்டிகளில் பங்கேற்போர், போட்டிக்குத் தேவையான பொருள்களை கொண்டு வர வேண்டும். போட்டி நடைபெறும் நாளில் காலை 9.30 மணி முதல் மாணவ, மாணவிகள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
போட்டிகளில் 9-12, 13-16 வயதுப் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுப்பிவைக்கப்படுவர். 

நன்றி-தினமணி.

Tuesday 28 January 2014

திருச்சி: சிறைநிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹித் ஜமாத் அமைப்பினரை  தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என  போஸ்டர்கள்  ஒட்டப்பட்டதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

முஸ்லீம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை உயர்த்த கோரி  இன்று சிறைநிரப்பும் போராட்டம் நடத்திவரும் தவ்ஹீத் ஜமாத்  அமைப்பினரை கைது செய்வதுடன் அவர்களை  தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என திருச்சி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால்  பரபரப்பு நிலவுகிறது அங்கு.

முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி சிறைநிரப்பும் போராட்டத்தை அறிவித்த தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பு அறிவித்தபடி இன்று  சென்னை, கோவை, நெல்லை, திருச்சி   இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். இதில்  லட்சகணக்கான முஸ்லீம்கள் கலந்துகொண்டு  மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள்  எழுப்பினர். 








இதனிடையே முஸ்லீகளின் சிறைநிரப்பும் போராட்டத்தினை கண்டித்து  அகில பாரத இந்து மகா சபா, அகிலபாரத அனுமன்சேனா என்ற இந்து அமைப்புகள் திருச்சி பகுதிகளில் போஸ்டர்களை  ஒட்டியிருந்தன.  ”தமிழக  அரசே! தமிழக அரசே! கைது செய் கைது செய்! இந்து விவசாயிகள் வாங்கிய கடனை  அடைக்க  கட்ட  இயலவில்லை என அரசுக்கு விளக்க அமைதியான முறையில் போராடியதை    ஒடுக்கும் விதமாக அவர்களை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையே.. தமிழகத்தில் சட்டம்  ஒழுங்கு கெட வேண்டும் என  எண்ணி இன்று  போராட்டம் அறிவித்துள்ள முஸ்லீம் அமைப்புகள் மீதும் கலந்துகொள்ளும் முஸ்லீகளையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்” என எழுதப்பட்ட இந்த போஸ்டர்கள் திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இதன் எதிரொலியாக அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் கூடுதல் பாதுகாப்பு அளித்துள்ளனர் திருச்சி மாநகர காவல்துறையினர்.  

நன்றி-விகடன்.com

Monday 27 January 2014



மூலவர்:மதுரகாளி
உற்சவர்:-
அம்மன்/தாயார்: -
தல விருட்சம்: மருதமரம்
தீர்த்தம்:திருக்குளம்
ஆகமம்/பூஜை :-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:சிறுவாச்சூர்
மாவட்டம்: பெரம்பலூர்
மாநிலம்: தமிழ்நாடு


 திருவிழா:

ஆண்டுதோறும் சித்திரைத் திங்களில் அம்மாவாசைக்கு பின்வரும் முதல் செவ்வாயன்று பூச்சொரிதல் தொடங்கும், அதற்கடுத்த செவ்வாய் காப்பு கட்டி 13 நாட்கள் பெருந்திருவிழா சிறப்புடன் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். இத்திருவிழாவில் மலை வழிபாடு, திருக்கல்யாணம், வெள்ளித் குதிரை வாகனம், திருத்தேர் முதலியன முக்கிய திருவிழா நாட்களாகும். இத்திருவிழா நாட்களில் ஆலயம் திறக்கப்பட்டு பூஜை நடைபெறும் சிறப்பு வழிபாடு : மேலும் தமிழ் ஆங்கிலப்புத்தாண்டு நாட்கள், ஆடி 18 ம் பெருக்கு புரட்டாசி நவராத்திரி 10 நாட்கள், ஐப்பசியில் தீபாவளத் திருநாள், கார்த்திகையில் தீபத்திருநாள், மார்கழி மாதப்பிறப்பு, வைகுண்ட ஏகாதேசி, தைப் பொங்கல், தைப்பூசம், மாசியில் சிவராத்திரி ஆகிய சிறப்பு நாட்களிலும் ஆலயம் திறக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

தலசிறப்பு:
பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது. வாரத்தின் திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது. திருவிழா மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகைகளின் போது மட்டும் பிற நாட்களிலும் ஆலயம் திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் கோயில் திறக்கப்பட மாட்டாது.

பொதுத்தகவல்:
குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்ட கோயில் மலைகளும் ஏரியும் குளமும் தோப்புகளும் வயல்களும் சூழ்ந்துள்ள மனதிற்கினிய சூழலில் ஊரின் எல்லையில் அன்னையில் திருக்கோயில் அமைந்துள்ளது.

எழிலார்ந்த ராஜ கோபுரம் அனைவரையும் வருக வருகவென அழைக்கிறது. அன்னை மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம், தலத்தின் காவல் தெய்வாமாக அய்யனார் உள்ளார்.

பிரார்த்தனை:
கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர். நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமல் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியவற்றுக்கு இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது.

மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக் இம்மாரித்தாய் இருப்பதால் இங்கு வரும் தனது பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறாள் என்பது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை

நேர்த்திக்கடன்:
மாவிளக்கு ஏற்றுதல் இத்தலத்தின் முக்கிய நேர்த்திகடன் ஆகும். வயிறு, நெற்றி, நெஞ்சு, கால், கை என்று நேர்ந்து கொண்டு அந்த பாகத்தில் மாவிளக்கு வைத்து அம்மனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். சிறுவாச்சூர் காளியம்மன் என்றாலே இந்த மாவிளக்கு நேர்த்திகடன் என்பதுதான் மிகவும் பிரபலம். இவை தவிர இத்தலத்தில் அங்கபிரதட்ணம் செய்வதும் பக்தர்களால் செய்யப்படும் புகழ்பெற்ற நேர்த்திகடன் ஆகும். இவை தவிர பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிசேகம், அபிசேக ஆராதனைகள்,அன்னதானம் ஆகியவற்றை செய்கிறார்கள்.

தலபெருமை:
இத்தலத்தில் மிகப்புகழ்பெற்ற நேர்த்திக்கடன் என்பது இந்த மாவிளக்கு நேர்த்திக்கடன் என்பதாகும். வெளியில் எங்கும் மாவிளக்கு மாவு தயாரிக்காமல் ஆலய வளாகத்திற்குள் அரிசி கொணர்ந்து ஊற வைத்து இடித்து இங்கேயே மாவிளக்கு மாவு தயார் செய்கிறார்கள். பின்பு அதனுடன் நெய்விளக்கு  ஏற்றித் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதற்காக மாவு இடிக்கத் தனியிடம் ஒதுக்கப்பட்டு உரல்களும், உலக்கைகளும் ஆலயம் மூலமாகவே வைக்கப்பட்டுள்ளன. இடிக்க முடியாத பக்தர்களுக்கு கூலிக்கு மாவிடித்துத்தர பணியாளர்களும் உள்ளனர்.

மதுரைக் காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக வந்ததாகக் கூறுகிறார்கள். அம்மன் சுமார் 4 அடி உயரமாக இருக்கிறார். வடக்கு நோக்கிய சன்னதியில் அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளாள்.

நான்கு திருக்கரங்கள் இவற்றில் உடுக்கை, பாசம், சூலம், அட்யபாத்திரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். இடது திருவடியை மடித்த நிலையில் வைத்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அமர்ந்த திருக்கோலம். திருவடியில் அரக்கன் இல்லாததால் அழிக்கும் தொழிலில் காட்சியில்லை. அருளும் நிலையிலேயே காட்சி.

தலவரலாறு:

சிலப்பதிகார நாயகி கண்ணகி மதுரையை எரித்தபின் மன அமைதி கொள்ளாமல் இத்தலம் வந்து அமைதி கொண்டால் என்று செவிவழிச் செய்திகள் கூறகின்றன. சிறுவாச்சூரின் வழிபாடு தெய்வம் செல்லியம்மன் ஆகும். ஒரு மந்திரவாதி தனது மந்திர வலிமையால் இவ்வம்மையைக் கட்டுப்படுத்தித் தீய செயல்களுக்குப் பயன்படுத்தி வந்துள்ளான். மதுரை காளியம்மன் இத்தலத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை இரவு தங்க இடம் கேட்கிறாள். செல்லியம்மனோ தன்னை மந்திர வலிமையால் தொல்லைப்படுத்தும் மந்திரவாதி பற்றிக் கூறுகிறாள்.

மதுரைக் காளியம்மனோ தான் அதற்குத் தக்க வழி செய்வதாகக் கூறித்தங்குகிறாள். வழக்கப்படி வந்த மந்திரவாதியை அன்னை எதிர்கொண்டு அழித்து விடுகிறாள். செல்லியம்மன் அன்னை திறம் கண்டு இனி அவளே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து அடியார்கட்கு அருள் பாவித்து வர வேண்டுகிறாள். தான் அருகிருக்கும் பெரியசாமி மலை சென்று விடுவதாகவும் ஆனால் கோயிலில் எப்பொழுதும் தனக்கு முதல் மரியாதை வேண்டுமெனவும் கூறுகிறாள். மதுரைக் காளியம்மனும் அதற்கு ஒப்புக் கொண்டு ஆலயத்தில் அமர்கிறாள்.

செல்லியம்மன் தனக்கு முதல் மரியாதை வேண்டுமென்று கேட்டதற்கு ஏற்ப பூஜையின் போது தீபாராதனை காட்டுகையில் முதலில் மலை நோக்கி மேலே தீபாராதனை காட்டி விட்டுதான் பிற்பாடு மதுர காளியம்மனுக்கு தீபாராதனை காட்டும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரைக் காளியம்மன் பக்தர்களுக்கு திங்கள் கிழமை காட்சி தருகிறாள். எனவேதான் திங்கள் வெள்ளி மட்டும் ஆலயம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் மதுரகாளியம்மன் செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாகக் கூறுகிறார்கள்

கோவில் சிறப்பு:
அதிசயத்தின் அடிப்படையில்: பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது. வாரத்தின் திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது. திருவிழா மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகைகளின் போது மட்டும் பிற நாட்களிலும் ஆலயம் திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் கோயில் திறக்கப்பட மாட்டாது. 

நன்றி- http://temple.dinamalar.com/New.php?id=813 

Sunday 26 January 2014



பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் இலவசமாக கார் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார் மைய இயக்குநர் ஜி. பார்த்தசாரதி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியன் ஓவர்சீஸ் பயிற்சி மையத்தில் கார் ஓட்டுநர் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற 20 வயதிலிருந்து 35 வயதிற்கு குறைவாகவும், 8- ம் வகுப்பு படித்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். பயிற்சி முடிந்தவுடன் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ், உரிமம், பொது வில்லை வழங்கப்படும்.
பயிற்சி பெற விருப்பமுள்ளோர் பெரம்பலூர் ரெங்கா நகரில் உள்ள ஐ.ஓ.பி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.
 குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல் மற்றும் 4 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், ரெங்கா நகர் (வாசுகி பால்ராஜ் மருத்துவமனை அருகில்) ஆத்தூர் சாலை, பெரம்பலூர் (04328- 277896) என்ற முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

நன்றி-தினமணி.

பெரம்பலூர் மாவட்ட கிராம ஊராட்சிகளில் தண்ணீர் பற்றாக்குறை இருந்தால் மாவட்ட நிர்வாகத்திற்குத் தெரிவிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு 121 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இரூர் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது:
ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகம் நடைபெற வழிவகை செய்வதற்காக கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. அரசின் திட்டங்கள், பயன் குறித்து தெரிந்துகொள்ள அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். இரூர் ஊராட்சியில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். ஊராட்சிப் பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை இருந்தால், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாகத் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் சுகாதாரத்தைக் காக்கும் வகையில் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தனிநபர் கழிப்பறை கட்ட அரசு மானியம் வழங்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி அனைத்து மக்களும் தங்களது வீடுகளில் கழிப்பறை கட்ட வேண்டும். தேசிய நுண்ணீர் பாசன இயக்கத் திட்டத்தின் கீழ், சிறு  குறு விவசாயிகளுக்கு 100 சதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதமும் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஹெக்டேர் வரை மானியம் அனுமதிக்கப்படுகிறது. தோட்டக்கலை அல்லது வேளாண்மை உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன் பெறலாம். அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் மூலம், பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள கிராம கல்விக் குழுக்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, பெரம்பலூர் மதனகோபால சுவாமி திருக்கோயிலில் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தலைமையில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஏ. சுப்பிரமணியன், சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி, நகர் மன்ற துணைத் தலைவர் ஆர்.டி. ராமச்சந்திரன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் ந. கிருஷ்ணகுமார், ரா. வெண்ணிலா, கோயில் செயல் அலுவலர் ராஜேந்திரன், இரூர் ஊராட்சித் தலைவர் ஸ்டாலின், மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ். ராஜேந்திரன், கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் தி. சின்னதம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி-தினமணி.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
வேப்பந்தட்டை அருகேயுள்ள அயன்பேரையூர் கிராமம், வடக்குத் தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் ராஜா (37). இவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் சனிக்கிழமை தூங்கிக் கொண்டிருந்தாராம். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பார்த்தபோது அவருக்குச் சொந்தமான மற்றொரு மாடி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ. 70 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
தகவலறிந்த வி. களத்தூர் போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.  ராஜா அளித்த புகாரின்பேரில், வி.களத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். 

நன்றி-தினமணி.

ஓட்டல் மற்றும் கடைகளில், நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருட்களில், எளிதில் கண்டுபிடிக்க முடியாத பொருட்களை, கலப்படம் செய்கின்றனர். இதை தெரிந்து கொள்ளாமல், சுவைக்காக விரும்பி சாப்பிட்டு, உடலை கெடுத்துக் கொள்கிறோம். காசு சம்பாதிக்க,
உயிரோடு விளையாடும் கயவர்களை, அடையாளம் கண்டு, தண்டனை பெற்றுத்தர
வேண்டிய, உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள், வேடிக்கை பார்ப்பது தொடர்கிறது.
சாதாரண ஓட்டல்கள் முதல் பெரிய, நடுத்தர ஓட்டல்கள் வரை, பல வித உணவுகளை சமைத்து மக்களுக்கு வழங்குகின்றன. நடைபாதைக் கடைகளில், உணவு வகைகள், பாஸ்ட் புட் மற்றும் ஜங்க் புட் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த உணவு வகைகளை சாப்பிடும் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.
தரமற்ற, கலப்பட உணவை சாப்பிட்டதால் தான் பாதிப்பு ஏற்பட்டது என்று டாக்டர் கூறும்போது தான், புரிந்து கொள்ள முடிகிறது. பெருங்காயத்தில் கோந்துக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கின்றனர். சர்க்கரையில் சுண்ணாம்புத் துாளும், மஞ்சள் துாள் மற்றும் துவரம்பருப்பில் 'மெட்டானில்' என்ற மஞ்சள் ரசாயனமும் கலப்படமாக சேர்க்கின்றனர்.
மிளகாய்த் துாளில் மரத்துாளை நனைத்து பொடியாக்கி, நிறமேற்றி, செங்கல் பொடியையும் சேர்க்கின்றனர். காபித் தூளில் சிக்கரி, புளியங்கொட்டையை பவுடராக்கி சேர்க்கின்றனர்.
கொத்துமல்லித் துாளில் குதிரைச்சாணத் துாள் கலப்படம் செய்யப்படுகிறது. சீரகத்தில் புல்விதை, நெய்யில் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் வனஸ்பதி,
உருண்டை வெல்லத்தில் 'மெட்டானில்'ரசாயனம், பாக்குத்துாளில் மரத்துாள், பாலில் மைதா அல்லது பார்லியை மாவு என கலப்பட பட்டியல் நீள்கிறது. இதே போல, நாம் அன்றாடம்
சாப்பிடும் மாத்திரை மற்றும் மருந்துப் பொருட்களில் போலிகள்
ஊடுருவியுள்ளன.
தரமான பொருட்களை தரமான இடத்தில் சாப்பிடுவதால் மட்டுமே, நம் உடலை நாம் பேணி பாதுகாக்க முடியும், அவசரத்துக்காகவும், பசிக்காகவும், எளிதில் கிடைக்கிறது என்பதற்காக, ரோட்டோர கடைகளில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடுகிறோம்.
'தரமற்ற, சுகாதாரமற்ற
ஓட்டல்களிலும் உணவுகளை சாப்பிட்டால், நாம் எளிதாக நோயின் பாதிப்புக்கு தள்ளப்படலாம். அதனால், மக்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பதோடு, வளரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான உணவு வகைகளை தான் வழங்க வேண்டும்' என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்
குமாரசாமி கூறுகையில், ''தரமற்ற உணவுகளால், இரைப்பை, கல்லீரல், மண்ணீரல், சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் ஆகியவை நேரடியாக பாதிப்புக்குள்ளாகின்றன. இதை கவனிக்காமல் விட்டால், நரம்புமண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு தளர்ச்சியும், மூளைசெயலிழப்பு, ப க்கவாதம் போன்றவை ஏற்படுகிறது. மனிதன் வாயை பேச்சிலும், உணவிலும் கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது நல்லது,''என்றார்.
கலப்பட உணவுக்கு எதிரான கண்காணிப்பு ஒருபுறம் இருந்தும், தண்டனை பெற்றுத்
தர வேண்டிய, உணவுப்பாதுகாப்பு ஆய்வாளர்களும் அதிகாரிகளும், வேடிக்கை பார்ப்பது தொடர்கிறது.
'கலப்படம் உறுதியானால் கடும் நடவடிக்கை'கோவை மண்டல உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவனிடம் கேட்டபோது, ''உணவுபாதுகாப்பு அலுவலர்கள் சரியான முறையில் ஆய்வுப்பணி மேற்கொள்கின்றனர். உணவுப்பாதுகாப்பு சட்டவிதிகளின்படி, கலப்படம் இருப்பது ஊர்ஜிதமானபின்பே நடவடிக்கை கடுமையாக இருக்கும். கால தாமதமானலும், கலப்படம் நிரூபிக்கப்பட்டால், நிரந்தரமாக உணவுப்பொருள் உற்பத்தி செய்வதை நிறுத்த முடியும்,'' என்றார்.

நன்றி-தினமலர்.

மும்பை: நாடு தழுவிய அளவில் 3 ஆயிரம் ஏ.டி.எம்.,. மையங்களை அமைக்க இந்திய தபால் துறை முடிவெடுத்துள்ளது,. மேலும், கிராமங்களில் 1,5 லட்சம் என்ற எண்ணிக்கையில் சிறிய அளவிலான ஏ.டி.எம்., மையங்களை திறக்கவும் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, வரும் பிப்ரவரி 5ம் தேதி, டில்லி, சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் புதிய ஏ.டி.எம்., மையங்கள் திறக்கப்பட உள்ளன.

நன்றி-தினமலர்.