Saturday 27 September 2014


சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அடுத்து என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. வாசகர்கள் கேள்வி எழுப்ப தி இந்து (ஆங்கிலம்) இதழின் கே.வெங்கடராமன் பதில் அளித்துள்ளார்.

மேல்முறையீடு செய்யலாமா? அல்லது இதோடு அனைத்தும் முடிந்ததா?

அவர் மேல்முறையீடு செய்யலாம். ஏனெனில் தீர்ப்பளித்தது சிறப்பு நீதிமன்றமே.

அடுத்த முதல்வர் யார்?

இதனை யார் வேண்டுமானாலும் ஊகிக்கலாம். இதே போன்ற ஒரு சூழலில் முன்பு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றார். இப்போது விசாலாட்சி நெடுஞ்செழியன் பெயர் பட்டியலில் முதலில் இருக்கிறது.

ஜெயலலிதா உடனடியாக காவலில் வைக்கப்படுவாரா?

தண்டனை 3 ஆண்டுகள் வரை கிடைத்தால், தீர்ப்பளித்த நீதிமன்றமே குற்றவாளி மேல்முறையீடு செய்வதை அனுமதிக்கும் விதமாக சிறையில் தள்ளப்படுவதை சற்றே ஒத்திவைக்க வாய்ப்புண்டு. ஆனாலும் இது நீதிமன்றத்தின் முழு விருப்பம் சார்ந்ததே. 3 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை என்று தீர்ப்பளிக்கப்படுமெனில் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஜாமீன் அளிக்கும் அதிகாரம் கிடையாது. குற்றவாளி உச்சநீதிமன்றத்தை அணுகவேண்டும். இப்படியொரு நிலை ஏற்பட்டால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.

ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படலாம்?

சட்டப்படி ஓராண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெறலாம்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் குற்றவாளிகள் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி.யாக இருக்கத் தடை விதிக்கிறது. ஆனால் முதல்வர்/பிரதமர்/அமைச்சர் ஆகிய பதவிகளிலிருந்து நீக்கப்படும் சட்டப்பிரிவு எது? ஜெயலலிதா எம்.எல்.ஏ.பதவியை இழந்தாலும் முதல்வராகத் தொடர வாய்ப்பிருக்கிறதா?

1951, மக்கள் பிரதிநித்துவச் சட்டம், எந்த ஒருவரையும் முதல்வர்/பிரதமர்/அமைச்சர் ஆவதை தடை செய்யவில்லை. இது அரசியல் சாசனத்தில் உள்ள பிரிவாகும். ஒருவர் எம்.எல்.ஏ. ஆக இல்லை என்றால் கூட 6 மாதங்களுக்கு முதல்வராகலாம். இப்படியிருந்தாலும், 2001ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத போதிலும் முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அவரது பதவியை தகுதி இழப்பு செய்தது. தற்போது தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தே தகுதி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது சொத்துக்கள் என்ன செய்யப்படும்?

வருவாய்க்கு அதிகமாகக் குவிக்கப்பட்ட சொத்துக்களை அடையாளம் கண்டு அவற்றை ஏலம் விடலாம். ஆனால் இதற்கெல்லாம் நீண்டகாலமாகும். காரணம் மேல்முறையீடு என்ற நடைமுறையெல்லாம் இருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை என்ன ஆகும்?

சட்டப் பேரவை தொந்தரவு செய்யப்படமாட்டாது.

அடுத்த தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியுமா?

தகுதி இழப்பு ஏற்பட்டது தொடர்ந்தால் அவரால் போட்டியிட முடியாது. இந்தத் தீர்ப்பு மேல்முறையீட்டில் மாற்றப்பட்டாலோ அல்லது குற்றவாளி என்ற தீர்ப்பு இடைநீக்கம் செய்யப்பட்டாலோ அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம்.

ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு என்ற போதிலும் தற்போதைய அமைச்சர்கள் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?

அமைச்சரவை என்பது முதல்வரின் பரிந்துரையின் பேரில் அமைக்கப்படுவது. இப்போது அவர் முதல்வர் இல்லை. முதல்வர் இல்லாத அமைச்சரவை கிடையாது. ஆகவே அடுத்த முதல்வர் ஆளுநரிடம் அமைச்சர்கள் பற்றி தெரிவிக்க வேண்டும்.

சிறைத்தண்டனை என்றால் அவர் எந்த மாநில சிறையில் அடைக்கப்படுவார்?

இப்போதைக்கு கர்நாடகா. ஆனால் தமிழகச் சிறைக்கு மாற்றுமாறு அவர் கோரிக்கை வைக்க உரிமை உண்டு.

நெருக்கடி நிலை பிரகடனம் செய்து தொடர்ந்து முதல்வராக நீடிக்க முடியுமா?

மாநில அளவில் நெருக்கடி நிலை பிரகடனத்திற்கு அரசியல் சாசனத்தில் இடமில்லை.

இந்த வழக்கின் தீர்ப்பு வெளிவர 18 ஆண்டுகள் ஏன்?

2000ஆம் ஆண்டிலேயே விசாரணை முடிவடையும் நிலையை எட்டியது. ஆனால் 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியைப் பிடித்த பிறகு அனைத்து சாட்சிகளும் தங்கள் வாக்குமூலங்களை மாற்ற வைத்தது. இதனையடுத்த் உச்ச நீதிமன்றத் தலையீட்டின் பேரில் கர்நாடகாவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. அங்கு இந்த வழக்கு மீண்டும் புதிதாகத் தொடங்கியது. பல மனுக்கள், ஏகப்பட்ட ஆவணங்களை மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் மாற்றங்கள் ஆகியவற்றால் காலதாமதம் ஆனது. 

-தி இந்து.

0 comments:

Post a Comment