Tuesday 23 September 2014


அகமதாபாத், செப்.24-

குஜராத் மாநிலத்தின் சர்ச்சைக்குரிய முஸ்லிம் மதத்தலைவர், மவுலானா மெஹ்தி ஹஸன்.

கடந்த 2011-ம் ஆண்டு, அந்நாள் குஜராத் முதல்மந்திரி நரேந்திர மோடி ‘சத்பாவனா’ என்ற பெயரில் உண்ணாவிரதம் இருந்தபோது, உண்ணாவிரத மேடையின் மீது ஏறிய மவுலானா மெஹ்தி ஹஸன், அவரது தலையில் குல்லா ஒன்றினை அணிவிக்க முயன்றார். அதனை, அணிந்துக் கொள்ள மோடி மறுத்து விட்டார்.

இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் ஊடகங்களில் மவுலானா மெஹ்தி ஹஸனின் பெயர் அடிபட ஆரம்பித்தது. அதிலிருந்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை இவர் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.

கடந்த 20-ம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த இவர், நவராத்திரி திருவிழாவை ’அரக்கர்களின் திருவிழா’ என்று குறிப்பிட்டார். இது இந்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

’நவராத்திரி திருவிழா ஊர்வலத்தின்போது குடிக்காரர்களும், கற்பழிப்பாளர்களும் அதிகம் பங்கேற்கின்றனர். அதனால்தான், நவராத்திரி திருவிழாவை அரக்கர்களின் திருவிழா என்று குறிப்பிட்டேன். நவராத்திரி விழாக்களில் இதைபோன்ற நபர்களை விலக்கி வைப்பது நல்லது என சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்துக் கொள்வதற்காகதான் நான் அப்படி குறிப்பிட்டேன்’ என்று தனது பேட்டிக்கு அவர் விளக்கமும் அளித்திருந்தார்.

இந்த கருத்துக்கு விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்துமத இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

நவராத்திரி தொடங்கவுள்ள இம்மாத 25-ம் தேதிக்குள் மவுலானா மெஹ்தி ஹஸனை போலீசார் கைது செய்யாவிட்டால் பெரும் போராட்டத்தை அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரித்த விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, பிற மதத்தவர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் குற்றப்பிரிவின்கீழ் மவுலானா மெஹ்தி ஹஸனை போலீசார் நேற்று கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

-மாலைமலர்.

0 comments:

Post a Comment