Tuesday 26 August 2014


நாடு முழுவதும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வங்கிக் கணக்கையும், ரூ.1 லட்சத்துக்கான விபத்துக் காப்பீட்டு வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்கும் "பிரதமரின் மக்கள் நிதி (ஜன் தன்)' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
சுதந்திர தினத்தன்று இந்தத் திட்டத்தை மோடி அறிவித்திருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இதை நடைமுறைக்கு கொண்டுவரும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் முதல் படியாக, வங்கிக் கணக்கு தொடங்குவோருக்கு "ரூபே' என்ற வங்கிப்பற்று அட்டையும் (டெபிட் கார்டு),  ரூ.1 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடும் வழங்கப்படுகிறது. இதற்காக அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் மோடி, மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் நரேந்திர மோடி திங்கள்கிழமை கூறியதாவது:
ஜன்தன் திட்டத்தின் கீழ், விபத்துக் காப்பீடு வழங்கப்படுவதுடன், ஓய்வூதியத் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வங்கிக் கணக்கை ஏற்படுத்திக் கொடுக்க தேசிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுடன், வங்கி கணக்கு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே அரசின் லட்சியம்.
இந்தத் திட்டத்தின் கீழ், 7 கோடி பேருக்கு வங்கி கணக்கு ஏற்படுத்தித்தர திட்டமிடப்பட்டுள்ளது. நவீனமாக மாறிவரும் உலகில், வங்கியின் நவீன முறைகளையும், அதன் நிதி முறைகளையும் அனைத்து தரப்பினரும் உபயோகப்படுத்தும் விதமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று நரேந்திர மோடி தெரிவித்தார்.
தில்லியில் "ஜன் தன்' திட்டத்தை 28ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், அன்றைய தினம் மற்ற மாநிலங்களில் நடைபெறும் இந்தத் திட்டத்தின் தொடக்க விழாக்களில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

-தினமணி.

0 comments:

Post a Comment