Thursday 31 July 2014


பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிகுளத்தில் உள்ள வெங்காய வணிக வளாகத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமையில் திறந்தமுறை ஏலம் நடைபெறும் என்றார் வேளாண்மை துணை இயக்குநர் செ. சுப்ரமணியன்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 24-ம் தேதி செட்டிக்குளம் வெங்காய வணிக வளாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாள்களில் ஏலம் நடைபெற உள்ளது.
விவசாயிகள் மறைமுக ஏலத்தில் கலந்துகொள்ளும்போது வெங்காயத்தை விற்பதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் எற்படும் சிரமங்களை தெரிவித்ததைத் தொடர்ந்து, மறைமுக ஏலத்துக்குப் பதிலாக திறந்தமுறை ஏலம் ஒவ்வொரு குவியலுக்கும் தனித்தனியாக நடத்தி உடனடி பணப்பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திறந்தமுறை ஏலம் நடைபெறும்.
எனவே, விவசாயிகள் தங்களிடமுள்ள சின்ன வெங்காயத்தை முற்பகல் 11 மணிக்குள் செட்டிக்குளம் வெங்காய வணிக வளாகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
வியாபாரிகள் தங்களது பெயரை பதிவு செய்த பின் ஏலத்தில் கலந்துகொள்ளலாம். அதிக விலை குறிப்பிடும் வியாபாரிக்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும். ஏலம் எடுத்ததற்கான தொகையை வியாபாரிகளால் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

-தினமணி.

0 comments:

Post a Comment