Saturday 21 December 2013




தமிழக முதலமைச்சர்
ஜெயலலிதா வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கரும்பு உற்பத்தியைப் பெருக்க
பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வரு
கிறது. ஒவ்வொரு ஆண்டும்
கரும்புக்கான, நியாயமான மற்றும் ஆதாய
விலையை மத்திய அரசு உயர்த்தும்
போதெல்லாம், கரும்பு விவசாயிகளின்
நலனைக் கருத்தில் கொண்டு, மாநில
பரிந்துரை விலையை தொடர்ந்து வழங்கிக்
கொண்டு இருக்கிறது.
அந்த வகையில், 2011-2012 ஆம்
ஆண்டிற்கான
கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும்
ஆதாய விலையாக டன் ஒன்றிற்கு 1,450
ரூபாய் கொடுக்கப்பட வேண்டும்
என்று மத்திய அரசு நிர்ணயம் செய்த
போது, போக்குவரத்துச் செலவு 100
ரூபாய் உட்பட கரும்புக்கான மாநில
அரசின் பரிந்துரை விலையை 650 ரூபாய்
உயர்த்தி 2,100 ரூபாயாகவும்; 2012-2013
ஆம் ஆண்டிற்கான கரும்பு விலையை டன்
ஒன்றிற்கு 1,700 ரூபாய் என மத்திய
அரசு நிர்ணயித்த போது, போக்குவரத்துச்
செலவு 100 ரூபாய் உட்பட கரும்புக்கான
மாநில அரசின் பரிந்துரை விலையை 650
ரூபாய் உயர்த்தி 2,350 ரூபாயாகவும்
வழங்க ஆணையிட்டேன்.
தற்போது, 2013-2014 ஆம் ஆண்டிற்கான
கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும்
ஆதாய விலையாக டன் ஒன்றிக்கு 2,100
ரூபாய் நிர்ணயம் செய்து மத்திய
அரசு உத்தரவிட்டுள்ளது.
கரும்பு விவசாயிகள் நலன்கள்
பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைக்
கருத்தில் கொண்டு, மத்திய
அரசு அறிவித்த விலையைக் காட்டிலும்,
2013-2014 ஆம் ஆண்டிற்கான மாநில
அரசின் பரிந்துரை விலையாக டன்
ஒன்றிற்கு போக்குவரத்துச் செலவு 100
ரூபாய் உட்பட 550 ரூபாய்
உயர்த்தி வழங்க நான்
ஆணையிட்டுள்ளேன். இதன்மூலம்,
கரும்பு விவசாயிகளுக்கு டன்
ஒன்றிக்கு 2,650 ரூபாய் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கான பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வடிவிலான இணையதளத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கான பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வடிவிலான இணையதளத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.
அதன் விபரம் வருமாறு: 




பெரம்பலூர் மாவட்டத்திற்கென்று  www.perambalur.nic.in என்ற முகவரியில் பிரத்தியேக இணையதளம் செயல்பட்டு வருகிறது. தற்போது தேசிய தகவல் மையத்தின் மூலம் புதிய தொழில் நுட்பத்துடன் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய இணையதளமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த இணையதளத்தில் பெரம்பலூர் மாவட்டம் தொடர்புடைய அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும். மேலும் முக்கியச்செய்திகள், அனைத்து அலுவலர்களின் தொலைபேசி எண்கள், பெரம்பலூர் நகரில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் குறித்த விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட பயனுள்ள தகவல்களும், முக்கியமான திட்டங்கள் குறித்தும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற தேவையான தகுதிகள் குறித்த விவரங்களும் இந்த இணையதளத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
மேலும் ஆன்லையின் மூலம் பல்வேறு தேவைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய விண்ணப்பங்களை பெறுவதற்கான இணையதள முகவரிகள், மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சார் ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்களின் அன்றாட நிகழ்வுகள் குறித்த செய்திகளும் இந்த இணையதளத்தில் இடம்பெற்றிருக்கின்றன. பொதுமக்கள் இந்த இணையதளத்தினை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கி.கண்ணதாசன், தேசிய தகவல் மைய அலுவலர் திரு.ரமேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். பெரம்பலூர்.

Friday 20 December 2013

“மற்றவர்கள்  செய்கிறார்களோ இல்லையோ, எனது சீர்திருத்தக் கருத்தை தினசரி வாழ்க்கையில் முதலில் நான் செயல்படுத்துவேன் என்று களமிறங்குபவரே உண்மையான சீர்திருத்தவாதி” என்கிறார் வீர சாவர்க்கர் [1].  இந்தக் கூற்றுக்கு ஏற்றபடியே அவர் வாழ்ந்தும் காட்டினார்.
1925ம் ஆண்டு தொடங்கி ரத்னாகிரி மாவட்டத்தின் பல பகுதிளில் சுற்றுப் பயணம் செய்து தீண்டாமைக்கும் சாதியத்திற்கும் எதிரான பிரசாரங்களை செய்து வந்தார். கிராமங்களில் கூட்டு பஜனை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். கிராமப் பள்ளிகளில் தாழ்த்தப் பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தனியாக உட்கார வைக்கப் படும் நடைமுறையை நிறுத்தக் கோரினார். மஹார், சமார், பால்மீகி சமுதாய மக்களிடம் அவர்கள் குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கான சிறு பொருள் உதவிகளையும் அவரது தொண்டர்கள் செய்தனர். ரத்னாகிரி ஹிந்து சபா அமைப்பின் சார்பாக 1932ம் ஆண்டு அப்பகுதியின் நிர்வாகியாக இருந்த லாமிங்டன் என்ற பிரிட்டிஷ் ஐ.சி.எஸ் அதிகாரிக்கு ஒரு மனுவை சாவர்க்கர் அனுப்பினார் –  “எல்லா சாதி மாணவர்களையும் ஒன்றாக பள்ளிகளில் அமரவைத்து கல்வி கற்பிக்க வேண்டும். அப்போது தான் பிற்காலத்தில் தங்கள் வாழ்க்கையிலும் அவர்கள் சாதியத்தைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். இது தொடர்பாக 1923ல் அரசு இயற்றிய சட்டத்தையே அமுல்படுத்த வேண்டும்.  தாழ்ந்த சாதி மக்களுக்கான சிறப்பு பள்ளிகள் என்று நீங்கள் இப்போது கொண்டு வரப் போகும் திட்டத்தைக் கைவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கோரினார் [2].

பள்ளிகள் போன்ற பொது இடங்களில் மட்டுமல்லாது, வீட்டளவிலும் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சாவர்க்கர் விரும்பினார். இதற்காக தசரா, மகர சங்கராந்தி ஆகிய பண்டிகைகளின் போது தாழ்த்தப் பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று இனிப்புகளை சாப்பிடுவதையும், வழங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். மாயி யமுனாபாய் (சாவர்க்கரின் மனைவி) அனைத்து சாதி இந்துப் பெண்களையும் அழைத்து  மஞ்சள் குங்குமம் தாம்பூலம் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தினார். தாழ்த்தப் பட்ட சாதி மகளிருக்கு  மற்ற சாதிப் பெண்கள் குங்குமம் வைப்பது, அதே போல அவர்களிடம் குங்குமம் வைத்துக் கொள்வது என்ற இரண்டு விஷயங்களையும் அந்த நிகழ்ச்சிகளில் நடைமுறைப் படுத்தினார்.
சாவர்க்கர் ஒரு சிறந்த மராத்தி நாடகாசிரியரும் கூட. பிரபல மேடை நாடக சபைகள் அவரது நாடங்களை நிகழ்த்தும் போது, தாழ்த்தப் பட்ட சமூக நண்பர்களுக்கு அந்த நிகழ்ச்சிகளின் அனுமதிச் சீட்டுகளை இலவசமாக வழங்கினார். அவர்கள் சமூகத்தில் எல்லாருடனும் கலந்து பழகுவதற்கு இத்தகைய முயற்சிகள் உதவும் என்று மிகச் சரியாகவே அவர் கருதினார். வங்கியிலிருந்து கடன் பெற்று, தாழ்த்தப் பட்ட மக்கள் இசைக்குழு (musical band) அமைக்க உதவினார். ஆனால், 1930களில் கூட, ரத்னாகிரியின் விட்டல் ஆலய கமிட்டியினர் கோயில் திருவிழாவின் போது முஸ்லிம் இசைக்குழுக்களை அழைத்து வந்தார்களே தவிர, இந்து தலித் இசைக்குழுவை அனுமதிக்கவில்லை! இப்படித் தான் இருந்தது அன்றைய பொது சமூக மனநிலை. [3]
1933ம் ஆண்டு, மே 1ம் நாள் அனைத்து இந்துக்களுக்குமான ஒரு தேநீர் விடுதி மற்றும் சிற்றுண்டிச் சாலையை ரத்னாகிரியில் சாவர்க்கர் தொடங்கினார். இந்தியாவிலேயே தாழ்த்தப் பட்ட சாதி மக்கள் மற்றவர்களுடன் சமமாக உட்கார்ந்து உணவருந்தச் செய்த முதல் உணவகம் இது தான். அதில் பரிமாறுபவர்களாக மஹார் சமூகத்தினர் இருந்தனர். தன்னை பார்க்க வருபவர்கள் யாராயிருந்தாலும் முதலில் அங்கு சென்று தேநீர் அருந்தி விட்டு வரவேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாக சாவர்க்கர் விதித்திருந்தார். இந்த எளிய செயலைச் செய்வதற்குக் கூட அந்தக் காலகட்டத்தில் மிகவும் துணிச்சல் வேண்டியிருந்தது. திலகரின் சீடரும் பிரபல மராத்திய எழுத்தாளருமான என்.சி.கேல்கர் சாவர்க்கரை சந்திக்கப் போய் அங்கு தேநீர் குடித்தார் என்பதற்காக புனே நகரின் சனாதனி இந்துக்களின் கடும் கண்டனத்திற்கு ஆளானார். சாவர்க்கரின் படைப்புகள் அனைத்தையும் தொகுத்தவர்  எஸ்.ஆர்.தாதே. அவர் முதல் முறையாக சாவர்க்கரை சந்திக்கச் சென்ற அனுபவத்தை பின்னாளில் விவரிக்கும் போது, தான் தேநீர் குடிப்பதை பல சாக்கு போக்குகள் சொல்லி மறுத்ததையும், சாவர்க்கர் விடாப்பிடியாக இருந்து தேநீரை அருந்த வைத்ததையும் பதிவு செய்கிறார். அந்த உணவகம் எப்போதும் நஷ்டத்தில் தான் ஓடியது. ஆயினும் சாவர்க்கர் தனது சொந்தப் பணத்தைப் போட்டு அதைத் தொடர்ந்து நடத்தினார். அதுவும் பிரிட்டிஷ் அரசு அளித்து வந்த 60 ரூபாய் மாதாந்திரப் படித் தொகையில் அவரது குடும்பம் முழுவதுமே வறுமையில் வாழ்ந்து வந்த காலத்தில். 


1930களில் சமபந்தி போஜனம் என்பது நினைத்துப் பார்க்க் முடியாத ஒரு செயலாகவே பலருக்கு இருந்தது. தீண்டாமையை தீவிரமாக எதிர்த்து வந்த காந்திஜி கூட  சமபந்தி போஜனம், கலப்பு திருமணம் போன்றவை அவசியமானவை, சாத்தியமானவை என்று தான் “கனவிலும் கருதவில்லை” என்று 1932ல் அறிவித்தார். சமபந்தி போஜனங்களில் கலந்து கொண்ட சாதி இந்துக்கள் அவர்கள் குடும்பங்களிலும், சமூகங்களிலும் கடுமையாக வெறுக்கப் பட்டார்கள். பரிகாரங்கள் செய்தாலன்றி அவர்கள் குடும்பத்துடன் திருமண உறவு கொள்ள மாட்டோம் என மற்ற ஆசாரவாதிகள் அறிவித்தனர். இவ்வளவற்றையும் மீறி சாவர்க்கர் சமபந்தி போஜன நிகழ்ச்சிகளை நடத்தினார். 1931ம் ஆண்டு காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட 35 காங்கிரஸ் உறுப்பினர்கள் விடுவிக்கப் பட்டதைக் கொண்டாடும் வகையில் சமபந்தி போஜன நிகழ்ச்சியை ரத்னாகிரியில் ஏற்பாடு செய்தார். 1934ல் கொங்கண் சமாசார் என்ற பத்திரிகையை சாவர்க்கர் தொடங்கினார். அதன் தொடக்க விழாவில் நடந்த சமபந்தி போஜன நிகழ்வில் அனைத்து சாதி இந்துக்களுடன் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டனர்.  1936ம் ஆண்டு பிரபல நடிகர்-பாடகர் பாலகந்தர்வா தனது கலை நிகழ்ச்சிக்கு சாவர்க்கரை அழைத்த போது, நிகழ்ச்சியின் இறுதியில் சமபந்தி போஜனம் இருந்தால் மட்டுமே வருதாக சாவர்க்கர் கூறி விட்டார். அவ்வாறே அந்த நிகழ்ச்சியும் நடந்தது. இந்தியா முழுவதும் பிறகு பல இடங்களில் நடந்த இத்தகைய சமுதாய சமத்துவ நிகழ்ச்சிகளுக்கு முன்னோடியாக சாவர்க்கரின் செயல்கள் அமைந்திருந்தன.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்த தாழ்த்தப் பட்ட டாக்ரா (Dhakra) சமூகத்து மக்களை ஆரிய சமாஜ “சுத்தி” சடங்கு வழியாக சாவர்க்கர் தாய்மதம் திரும்பச் செய்தார். அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மற்ற இந்துக் குடும்பங்கள் மணமுடிக்க வேண்டும் என்பதை முனைந்து செயல்படுத்தினார். இத்தகைய ஒரு பெண்ணின் திருமணத்தில் தானே அவளது தந்தையாக இருந்து “கன்யாதானம்” செய்து வைத்தார். மாங்க் (maang) சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் சாவர்க்கர் வீட்டிலேயே அவரது மகள் போல வளர்ந்தாள்.  பல தாழ்த்தப் பட்ட சமூக மக்களுக்கு  எழுதப் படிக்க கற்பிக்கும் வகுப்புகளை தனது வீட்டிலேயே சாவர்க்கர் நடத்தினார். அந்த மாணவர்களுக்கு மற்ற பாடங்களுடன் காயத்ரி மந்திரத்தையும் கற்றுக் கொடுத்தார்.
1933 பிப்ரவரி 22 அன்று “தீண்டாமை” அரக்கனின் கொடும்பாவியை எரிக்கும் நிகழ்ச்சியை பெரிய அளவில் விளம்பரம் செய்து ரத்னாகிரியில் சாவர்க்கர் நடத்தினார். டாக்டர் அம்பேத்கரின் மஹாட், நாசிக் சத்தியாகிர போராட்டங்களுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்தார். 1933 நவம்பர் 13 அன்று ஒரு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க அம்பேத்கரை  ரத்னாகிரிக்கு வருமாறு சாவர்க்கர் அழைப்பு விடுத்தார்; ஏதோ காரணங்களால் அம்பேத்கர் வர முடியாமல் போயிற்று. 1930ல் முதல் முறையாக தாழ்த்தப் பட்ட இந்துக்களும் கலந்து கொண்ட ‘கணேச உத்சவ்’ விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தினார். அந்த விழா நிகழ்ச்சிகளில் தாழ்த்தப் பட்ட சாதிகளின் கலைஞர்கள் கீர்த்தனங்கள் பாடினர். அப்பாடகர்களை மற்ற சாதி இந்துக்கள் மாலை அணிவித்து கௌரவித்தனர். அனைத்து சாதி பெண்களும் கலந்து கொண்ட சமபந்தி போஜனம் இந்த விழாவின் சிறப்பு அம்சமாக இருந்தது.
ஆலய பிரவேச இயக்கங்கள் தொடங்கியிராத காலகட்டம் அது. எந்த விதத்திலும் சாதிப் பாகுபாடுகள் இல்லாத ஒரு புதிய இந்து ஆலயத்தை முன்னுதாரணமாக நிறுவ வேண்டும் என்ற சாவர்க்கரின் திட்டத்திற்கு அவரது சகாக்களான பாகோஜி சேத் கீர், டாக்டர் மகாதேவ் கண்பத் ஷிண்டே, காசிநாத் லட்சுமண் பாருலேகர் ஆகியோர் எல்லா ஒத்துழைப்பும் தருவதாகக் கூறினர்.  1929ம் ஆண்டு மகாசிவராத்திரி தினத்தன்று டாக்டர் குர்தகோடி (Dr. Kurtakoti)  சங்கராசாரியார் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.  இந்த சங்கராசாரியார் சாதியத்தை முழுமையாக எதிர்த்த சிறந்த ஆன்மீகத் தலைவராவார். அந்த விழாவில் சாவர்க்கர் கோயில் குறித்த தனது சிந்தனைகளை வெளியிட்டார் -

Bhagoji Seth Keer

“காசி, பூரி, துவாரகை, ராமேஸ்வரம் முதற்கொண்டு அனைத்து கோயில்களும் எல்லா சாதிகளையும் சேர்ந்த இந்துக்கள் தரிசனம் செய்ய திறந்து விடப் படவேண்டும். அதுவே எனது எண்ணம். பிறப்பு அடிப்படையிலான  சாதி வேறுபாட்டைக் காட்டி எந்த ஒரு இந்துவுக்கும் அந்த உரிமை மறுக்கப் படக் கூடாது. இந்தக் கொள்கையை ஒட்டுமொத்த இந்து சமூகமும் கட்டாயம் ஏற்றுக் கொள்ளத் தான் போகிறது. ஆனால் அதுவரை காத்திருக்காமல், உடனடியாக இத்தகைய ஒரு கோயிலை நாம் உருவாக்கிக் காட்டியாக வேண்டும்..
கட்டிட காண்டிராக்டரான பாகோஜி சேத் தலைமையில் உருவாகும் அறக்கட்டளை இக்கோயிலைக் கட்டும். ஸ்ரீ லஷ்மி நாராயணர், புனிதமான சிவலிங்கம், குருபாதுகைகள் ஆகிய தெய்வங்கள் இக்கோயிலை அலங்கரிக்கும். பிராமண க்ஷத்ரிய வைசிய சூத்திர சமூகங்களிலிருந்தும், இப்போது தீண்டாதார் ஆக உள்ள சாதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் கோயில் கமிட்டியில் இருக்க வேண்டும். கோயிலின் அர்ச்சகர் இதில் எந்த சாதியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்..”
என்று தனது வரைவை முன்வைத்தார்.
“இந்த வரைவை நாம் செயல்படுத்த முடியவில்லை என்றால் புதிய கோயில் கட்டுவதற்கே அவசியமில்லை. தனது பழைய கோயில்களை பாதுகாக்கும் துணிவும் சக்தியும் இல்லாத ஒரு சமூகத்திற்கு புதிய கோயில்களைக் கட்ட எந்த அதிகாரமும் இல்லை.. இந்தக் கோயில் அந்த சக்தியைத் தூண்டும் ஒரு கேந்திரமாக அமையும். மஹார், சமார் என்று தீண்டாதார் ஆகிவிட்ட சமூகம் மட்டும் இன்று தாழ்ந்தவர்களாக, “பதிதர்களாக” இல்லை. ஒட்டுமொத்த இந்து சமூகமுமே அன்னிய ஆட்சியின் கீழ் தாழ்ந்து போய் இருக்கிறது.  தாழ்வுற்று நிற்கும் இந்த ஹிந்து தேசத்தை மீட்கும் தெய்வத்தை, ஹிந்துக்கள் இழந்து விட்ட அனைத்தையும் அவர்கள் திரும்ப்ப் பெறச் செய்யும் ஒற்றுமை தெய்வத்தை நான் “பதித பாவன” என்று அழைப்பேன்”
என்று முழங்கினார். விழாவின் முடிவில் சாவர்க்கர் இயற்றிய இந்து ஒற்றுமை கீதம் பாடப் பட்டது.

பதிதபாவன மந்திர், ரத்னாகிரி

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் ரூபாய் செலவில் (1920களின் கணக்குப் படி) மிக அருமையாக கோயில் கட்டி முடிக்கப் பட்டது. இந்த செலவில் பெரும்பகுதியை பாகோஜி சேத் அளித்தார். எனவே அவரது கரங்களால் பூஜைக்குரிய விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப் பட வேண்டும் என்று சாவர்க்கர் விரும்பினார்.
வேத சடங்குகளை செய்வதற்கு தகுதியற்றது என்று கருதப் பட்ட “பண்டாரி” சாதியைச் சேர்ந்தவர் பாகோஜி சேத். அவரது குடும்பத்தின் பூஜைகள், சடங்குகள் அனைத்தும் வேத மந்திரங்கள் இல்லாமல் புராண ஐதிக சுலோகங்கள் மட்டுமே ஓதி நடத்தப் பட்டன. இந்தத் தடையையும் சாவர்க்கர் உடைக்க விரும்பினார். அனைத்து சாதிகளுக்கும் வேதம் கற்கவும், வேத சடங்குகள் செய்யவும், கோயில்களில் பூஜை செய்யவும் உரிமை உள்ளது என்பதற்கான சாஸ்திர ஆதாரங்களை விளக்கி கட்டுரைகள் எழுதினார். காசி, நாசிக், புணே போன்ற இடங்களில் இருந்து வேத பண்டிதர்களை அழைத்து இது பற்றி கருத்துக் கூற வேண்டினார்..  பண்டிதர்கள் அனைவரும்  பாகோஜி சேத் எந்த தீய குணங்களும் இல்லாத உத்தமமான மனிதர் என்பதை ஏற்றனர். ஆனால், அவர் வேத சடங்குகள் செய்ய தகுதியற்றவர் என்றும், அனைத்து சாதியினரும் வேதம் கற்க உரிமையில்லை என்றும் அறிவித்து விட்டனர். இவ்விஷயத்தில் குர்தகோடி சங்கராசாரியாரின் கருத்தையும் அவர்கள் நிராகரித்தனர்.
Shankaracharya Dr. Kurtakoti, President of Hindu Mahasabha, Prayag 1924 and Lahore 1936


தன் காரணமாக கோயிலின் பிரதிஷ்டை தடைபடுகிறதே என்று பாகோஜி சேத் கீர் மனமுடைந்தார்.  இரண்டு வருடங்கள் முன்பு தான் மும்பையில் அனைத்து இந்து சாதிகளுக்குமான மயான பூமியை பல எதிர்ப்புகளுக்கு இடையில் அவர் நிறுவியிருந்தார்.  பண்டிதர்களின் சொற்படியே செய்யலாம் என்று  இறைஞ்சினார். ஆனால் சாவர்க்கர் தன் முடிவில் பின்வாங்கவே போவதில்லை என்று அறிவித்தார் – “ஊரில் எத்தனையோ பழைய கோயில்கள் உள்ளன. நாம் ஒரு புதிய கொள்கையை நிறுவுவதற்காக இந்தப் புதிய கோயிலை நிறுவுகிறோம்.  இப்போது இந்த பண்டிதர்களின் அழுத்தத்தால் நம் உறுதியிலிருந்து பின்வாங்கினால் இது முழுவதுமே அர்த்தமற்றதாகி விடும். நாம் திட்டமிட்ட படி நம் நிகழ்ச்சிகளை நடத்துவோம்” என்றார். தர்மம் அதன் குழந்தைகளைக் கைவிடவில்லை. வேறு சில வேத பண்டிதர்கள் வழிகாட்ட பாகோஜி சேத் வேத சடங்குகளை செய்தார்.


1931ம் ஆண்டு பிப்ரவரி 22ம் நாள் கணேச சாஸ்திரி மோதக் என்ற சிறந்த வேத பண்டிதரின் தலைமையில் ஹோமங்கள் நடைபெற்று, பதிதபாவன தெய்வங்களின் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப் பட்டன. பெரும் எண்ணிக்கையில் தாழ்த்தப் பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள்  பிரதிஷ்டாபன விழாவில் கலந்து கொண்டு ஆலயத்திற்குள் சென்று தெய்வங்களை வணங்கினர். சமார், மஹார் சாதிகளைச் சேர்ந்த மக்கள் சங்கராசாரியார் குர்தகோடி அவர்களின் கால்களில் விழுந்து வணங்கினர். இதற்கு முன் சங்கராச்சாரியார் என்றழைக்கப் படும் சன்னியாசிகளின் காலில் விழுந்து வணங்குவது கூட அவர்களுக்கு தடை செய்யப் பட்டிருந்தது!  பதிதபாவன கோயிலின் உருவாக்கம் சமூக சீர்திருத்தங்களில் சாவர்க்கர் கொண்டிருந்த பேருறுதியை என்றென்றும் பறைசாற்றும்.  இன்றும் புணே, மும்பை, கோல்ஹாபூர் என்று பல ஊர்களில்  இதே பாணியில் அமைந்த பதிதபாவன ஆலயங்களை நாம் காணமுடியும்.
சாவர்க்கரின் இந்த அரிய சமுதாய சமத்துவப் பணிகளை அவரது அரசியல் எதிரிகளாக இருந்தவர்களும் மனம் திறந்து பாராட்டினர். பிரம்ம சமாஜ தலைவர் விட்டல் ராம்ஜி ஷிண்டே, சத்யசோதக் மண்டல் என்ற பகுத்தறிவு இயக்கத்தை நிறுவிய மாதவ் ராவ் பகல் ஆகியோர் தாங்கள் நினைத்துப் பார்க்க்க் கூட முடியாத விஷயங்களை சாவர்க்கர் செய்து காட்டியிருக்கிறார் என்று வாழ்த்தினர். அம்பேத்கர் சாவர்க்கரை பாராட்டியதை சென்ற பாகத்திலேயே பார்த்தோம்.
பதினைந்து ஆண்டுகள் கொடுஞ்சிறை வாழ்க்கைக்குப் பின்னர்,  பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் சமரசமற்ற சமுதாய சமத்துவப் போராளியாக சாவர்க்கர் திகழ்ந்தார். புகழ், பணம், அரசியல் அதிகாரம், பிராபல்யம் எதைப் பற்றிய எண்ணமும் இல்லாமல்,  சிந்தனைச் சிற்பியாக மட்டுமல்ல, தெருவில் இறங்கிப் போராடும் ஒரு சிப்பாயாகவும் வேலை செய்தார்.
அவருக்கு உத்வேகமூட்டியது எது? “ஒரு கொள்கை தேச நலனுக்கு உகந்ததா இல்லையா என்று சீர்தூக்கிப் பார்த்துத் தான் அதை ஆதரித்துப் பரப்பவோ, நிராகரிக்கவோ வேண்டும்; அதன் காரணமாக மக்கள் மத்தியில் புகழ் கிடைக்குமா அல்லது எதிர்ப்பு வருமா என்பதை வைத்து அல்ல” இதுவே சாவர்க்கரின் உறுதியான தீர்மானமாக இருந்தது [4].  இது எப்போதும் தன் நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காக இக்கருத்தை ஒரு சம்ஸ்கிருத சுபாஷிதமாக சுருக்கி எழுதி வைத்திருந்தார் – “மக்களிடம் புகழ் அல்ல, மக்களின் நலனே உயர்வானது, இலட்சியமாகத் தகுந்தது” (வரம் ஜனஹிதம் த்யேயம், கேவலா ந ஜனஸ்துதி).
எல்லா சமூகப் போராளிகளும் நினைவில் கொள்ள வேண்டிய சுபாஷிதம் அது.

இந்தக் கட்டுரைக்கான அனைத்து தகவல்களையும் தந்து உதவிய http://www.savarkar.org/ இணையதளத்திற்கு நன்றி.
சான்றுகள்:
[1] 1935, Hindutvache panchapran or The Spirit of Hindutva; Samagra Savarkar vangmaya, Vol. 3, p.75; hereafter abbreviated as SSV 3:75)
[2] 1937,Balarao Savarkar, Hindu Samaj Sanrakshak parva, Veer Savarkar Prakashan, Mumbai, 1972, p. 159
[3] Balarao Savarkar, ibid, p. 217
[4] Balarao Savarkar, ibid, p. 159

நன்றி-http://www.tamilhindu.com


ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 20.12.2013 முதல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பருத்தி மற்றும் மக்காச்சோளம் ஏலம் நடைபெறும் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
          பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வருகிற 20 ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் வாரந்தோறும் பருத்தி மற்றும் மக்காச்சோளம் ஏலம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய செய்திக்குறிப்பில் இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 31,100  எக்டர் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு தற்சமயம் முதிர்ச்சி மற்றும்  அறுவடை நிலையில் உள்ளது. விவசாயிகள் தங்களது பருத்தி மகசூலை வெளி வியாபாரிகளிடம் விற்பனை செய்வதால் எடை குறைவு, குறைவான விலை போன்றவற்றால் அவர்களின்  வருவாய் குறைகிறது.
எனவே விவசாயிகள் பருத்தி மகசூலுக்கு  நல்ல விலை பெற வேண்டும் இதன்மூலம்  அதிக வருமானம் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் பெரம்பலூர்  வடக்கு மாதவி சாலையில் காந்தி நகரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. இங்கு நடப்பாண்டில் வருகிற வெள்ளிக்கிழமை (20.12.2013) முதல் ஏலமுறையில் பருத்தி விற்பனை துவங்கப்பட உள்ளது. இந்த விற்பனை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது.  
 இங்கு ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 2000 மெ.டன் கொள்ளளவு உள்ள சேமிப்பு கிடங்கு மற்றும் ரூ.31 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 25 மெ.டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன வசதியுடன் கூடிய சேமிப்பு கிடங்கு ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
                விவசாயிகளுக்கு இலவச தராசு வசதி, சரியான எடைமற்றும் மறைமுக ஏலம் மூலம் பருத்திக்கு நல்ல விலை கிடைக்கும் இதன்மூலம் விவசாயிகள் அதிக வருவாய் பெறமுடியும். மேலும் விவசாயிகளிடமிருந்து எவ்வித கட்டணமும் வசூல் செய்யப்படுவதில்லை. தரகு, கமிஷன் கிடையாது. பிற சந்தைகளில் நிலவும் விலை விபரங்களை இங்குள்ள டிக்கர் போர்டு கருவி மூலம்  அறிந்து கொள்ளும வசதி உள்ளது. விலை குறைவாக இருக்கும்போது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கிடங்கில்  இருப்பு  வைத்து நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்யலாம்.
                விளைபொருட்களை இருப்பு  வைத்து பொருளீட்டுக்கடன் ரூ. 2 லட்சம் வரை பெறலாம். இவ்வாறு பெறப்படும் கடனுக்கு முதல் 15 நாட்களுக்கு வட்டி இல்லை. 16ம் நாள் முதல் 6 மாதம் வரை மிக குறைந்ந வட்டி (5%) மட்டுமே பெற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும்  ஒரு ஆண்டில் குறைந்தது ஒரு மெ.டன்  அளவு விளைபொருளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு உழவர் நலத்திட்டத்தின் மூலம் இலவச காப்பீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் விபத்து காலங்களில்  ரூ.50,000 முதல் ரூ.1 இலட்சம் வரை காப்பீட்டுத்தொகை பெற முடியும். மக்காச்சோளம் கதிர் அடிக்கும் கருவி 1மணி நேரத்திற்கு ரூ.96க்கும், ரோட்டவேட்டர் கருவி 1 மணி நேரத்திற்கு ரூ.23க்கும் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது.   
  எனவே பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பருத்தி மற்றும் மக்காச்சோளம் போன்ற விளைபொருட்களை வெள்ளிக்கிழமை தோறும் பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டுவந்து விற்று நல்ல விலையும் அதிக வருவாயும் பெற்று பயனடைய வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு :  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.
         
        
       தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் ரேசன் கார்டு மீண்டும் , மீண்டும் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ரேசன்கார்டு இந்த டிசம்பர் 31 தேதியுடன் காலாவதியாகிறது. ஏற்கனவே கடந்த முறை இந்த ரேசன்கார்டு ஒரு முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இன்று 2 வது முறை நீட்டிக்கப்படுகிறது.
இது குறித்து முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளததாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவில் வரும் 2014 டிசம்பர் வரை நடப்பில் இருக்கும் ரேசன்கார்டு நீட்டிக்கப்படுகிறது. இதற்கென உள்தாள் அந்தந்த ரேசன்கடைகளில் விநியோகிக்கப்படும். மின்னணு குடும்ப அட்டைகள் 2014 -15 ல் தான் வழங்க முடியும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

நன்றி- தினமலர்.

தேசிய அடையாள அட்டை  (ஆதார் ) பதிவு விடுபட்டவர்களுக்கு பதிவு செய்திட இரண்டாம் கட்ட முகாம் கிராமம் மற்றும்  வார்டு வாரியாக 18.01.14 வரை நடத்தப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தேசிய அடையாள அட்டை  (ஆதார் ) பதிவு விடுபட்டவர்களுக்கு பதிவு செய்திட இரண்டாம் கட்ட முகாம் கிராமம் மற்றும்  வார்டு வாரியாக  18.01.14 வரை நடத்தப்படுகிறது என்று  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டைக்கான தகவல்களை பதிவு செய்யும் முதல் கட்ட முகாம் முடிவுற்றதை அடுத்து இரண்டாம் கட்டமாக பெரம்பலூர், வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தேசிய அடையாள அட்டை பெற புகைப்படம், கைரேகை, விழித்திரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்திட ஏதுவாக சிறப்பு முகாம்கள் 13.12.13 முதல் நடத்தப்பட்டு வருகின்றன.
பெரம்பலூர் நகராட்சி பகுதியில் வசிக்கும் 1 முதல் 21 வார்டு பொதுமக்கள் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்திலும், பெரம்பலூர் குறுவட்ட பகுதி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், பெரம்பலூர் வட்டத்தைச்சேர்ந்த குரும்பலூர், வேப்பந்தட்டை வட்டத்தை சேர்ந்த பசும்பலூர், வாலிகண்டபுரம், வெங்கலம் ஆகிய   குறுவட்ட பகுதி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தொடர்புடைய வருவாய் ஆய்வாளர் (RI) அலுவலகத்திலும் தங்களது பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த இரண்டாம் கட்ட முகாம்கள் கிராமம் மற்றும்  வார்டு வாரியாக 18.01.14 வரை அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணிவரை நடைபெறும்.
இந்த முகாம்கள் தங்கள் பகுதியில் எந்த தேதியில் நடத்தப்படுகிறது என்பதை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் முன்கூட்டியே மக்களுக்கு தெரியப்படுத்துவார்கள்.
இம் முகாமிற்கு பதிவு செய்ய வரும் பொதுமக்கள் அனைவரும் 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புதல் சான்று அல்லது கிராம நிர்வாக அலுவலர் சான்று, அசல் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவு செய்ய வரவேண்டும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர். 

வ,களத்தூர் உறவுகளே, நீங்கள் வாலிகண்டபுரம் வருவாய் ஆய்வாளரை (RI) அனுகி பதிவு செய்துகொள்ளுங்கள் .

Thursday 19 December 2013

வீர சாவர்கர்
சுதந்திரப் போராட்ட புரட்சி வீரர், இந்துத்துவ கருத்தியலை உருவாக்கியவர் என்ற அளவிலேயே நாம் பெரும்பாலும் வீர சாவர்க்கரைக் குறித்து  அறிந்துள்ளோம். அரசியல் ரீதியாக வீர சாவர்க்கருக்கு எதிரானவர்கள் அவரைக் குறித்து தொடர்ந்து நிகழ்த்தி வரும் அவதூறு பிரசாரங்களால், பலரும் ஒட்டுமொத்தமாகவே அவரை பழமைவாதி, எதிர்மறைவாதி, கருத்து வெறியர்  என்ற அளவில் நிராகரிக்கின்றனர். இது முற்றிலும் தவறான பிம்பம்.
வீர சாவர்க்கர் சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், வரலாற்று ஆசிரியர், நவீன மராத்தி இலக்கிய முன்னோடி, அரசியல் தலைவர் என்று பல பரிமாணங்கள் கொண்ட ஒரு மாபெரும் பன்முக ஆளுமை ஆவார். அவரது படைப்புகளின் கணிசமான பகுதிகள் மராத்தி மொழியிலேயே உள்ளன.  அவை இன்னும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப் படவில்லை என்பதால் இந்தப் பரிமாணங்கள் குறித்து அதிகம் பேசப் படுவதில்லை. சமூக சீர்திருத்தங்களில் அவரது மகத்தான பங்களிப்பு குறித்து இக்கட்டுரையில் பார்ப்போம்.
1910ல் லண்டனில் அதிகாரபூர்வமாக பிரிட்டிஷ் அரசு வீர சாவர்க்கரைக் கைது செய்து அந்தமானுக்குக் கப்பலில் கொண்டு சென்றது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே மிக அதிகமான 50 ஆண்டு கடுங்காவல் தண்டனை அவருக்கு வழங்கப் பட்டது. அந்தமான் இருட்சிறையில் சொல்லொணாக் கொடுமைகளை அவர் சகிக்க நேர்ந்தது. மக்கள் போராட்டங்கள் தந்த அழுத்தத்தால் 1921ல் அந்தமான் சிறையிலிருந்து அவர் விடுவிக்கப் பட்டு 1924 வரை அலிப்பூர், ரத்னாகிரி, எரவாடா சிறைகளில் அடைக்கப் பட்டார். பின்னர் விடுவிக்கப் பட்டு, நேரடி அரசியலில் ஈடுபடுவதில்லை என்ற உத்தரவாதத்துடன் ரத்னாகிரிக்கு வெளியே செல்ல அனுமதி இல்லை என்ற நிலையில் 13 ஆண்டுகள் காவலில் வைக்கப் பட்டார்.  வாழ்நாள் முழுவதுமே சமுதாய சமத்துவத்திற்காப் போராடியவர் தான் அவர். ஆயினும் குறிப்பாக 1924 முதல் 1937 வரையிலான இந்தக் காலகட்டத்தில் அவரது பங்களிப்பு குறிப்பிடும்படியாக இருந்தது.  சமூக சமத்துவம் குறித்த சிந்தனைகளை தொடர்ந்து தன் எழுத்துக்களில் வடித்தார். நேரடியாக களப்பணிகளிலும் ஈடுபட்டார்.
அக்கால கட்டத்தில் இந்திய தேசபக்த அரசியல் தலைவர்களும், சமூக சீர்திருத்தவாதிகளும் இரு தனித்தனி பிரிவுகளாக இயங்கினார்கள். தேச விடுதலையே முதல் இலக்கு என்று பால கங்காதர திலகரும், சமூக விடுதலையே அதைவிட முக்கியமானது என்று கணேஷ் கோபால் அகர்கரும் முழங்கினர்.  இந்த இரு இழைகளையும் இணைப்பதாக சாவர்கரின் சிந்தனை அமைந்திருந்தது.
ஜாதி ஒழிப்பு கட்டுரைகள் (Jatyuchchedak Nibandh), அறிவியல் நோக்குக் கட்டுரைகள் (Vignan-nishtha Nibandh), எஸ்க் ரே கதிர்கள் (Ksha kirane), சமூக சித்திர சிறுகதைகள் (Samaj Chitre), ஹிந்துத்துவத்தின் உயிர்மூச்சுகள் (Hindutvache panchapran) ஆகிய நூல்களை அவர் எழுதினார். தீண்டாமை, பெண்கள் மீதான வன்முறை, ஆசாரவாதிகளின் போலித் தனம், தாய்மதம் திரும்புதல் ஆகிய களங்களை முன்வைத்து “சாபத்திற்கு மாற்று” (Ushaap) என்ற அற்புதமான நாடகத்தையும் படைத்தார். அறிவுஜீவியாக மட்டும் நின்றுவிடவில்லை அவர். “என் தெய்வத்தை இந்தக் கண்களால் தரிசிப்பேன்,  நெஞ்சாரக் கண்டு களிப்பேன்” – மகாராஷ்டிரம் முழுவதும் ஆலய பிரவேச இயக்கங்களில் பிரபலமாக பாடப் பட்ட இது போன்ற எளிய, உணர்ச்சியூட்டும் பாடல்களையும் எழுதினார்.
அம்பேத்கருக்கும் முன்பே, சாதி அமைப்பு குறித்து அறிவியல் பூர்வமான தேடல்களை தனது நூல்களில் முன்வைத்தவர் சாவர்க்கர். தாழ்த்தப் பட்ட மக்களைக் குறிக்க ஹரிஜன், தலித் ஆகிய சொற்களை விடவும், முன்னாள் தீண்டத்தகாதவர் (பூர்வ-அஸ்ப்ருஷ்ய) என்பதே பொருத்தமானது எனக் கருதி, அவ்வாறே தன் எழுத்துக்களில் அவர் பயன்படுத்தினார். “ஸ்மிருதிகள் உருவாக்கிய சாதியம் என்பது சமூக மேல் அடுக்கிலுள்ள பிராமணர், க்ஷத்தியர் ஆகியோரிடம் மட்டுமல்ல, எல்லா சமூக நிலைகளிலும் இருக்கிறது. “பங்கி” (தோட்டி) சமூகத்துக் காரன் “டோம்” (மற்றொரு தாழ்த்தப் பட்ட சாதி) சமூகத்தவனிடம் தனது மேட்டிமையை நிறுவுகிறான். எல்லா சமூகங்களும் மோசமான இந்த சமூக அடுக்கு முறையைப் பாதுகாத்து வந்துள்ளன. இதை சீர்திருத்துவதற்கான பொறுப்பும் எல்லா சமூகங்களின் தோள்கள் மீதும் உள்ளது” என்று 1935ம் ஆண்டே அவர் எழுதுகிறார் [1].
“புனித நூல்களின் அடிப்படையிலான சாதியம் என்பது ஒரு மனநோய். நமது மனம் அதை ஏற்க மறுத்துவிட்டால், அடுத்த கணமே அந்த நோயிலிருந்து விடுபட்டு விடுவோம்” என்று அறைகூவுகிறார் [2]
1935ம் ஆண்டு அனைத்து இந்துக்களையும் நோக்கி, அவர் விடுக்கும் கோரிக்கை –
“எழுங்கள். மற்றவர்கள் செய்கிறார்களோ இல்லையோ, இன்றிலிருந்து நீங்கள் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுங்கள். நாய்களையும் பூனைகளையும் தொட்டு உறவாடும் அந்தக் கைகளால், எனது தர்ம சகோதரராக உள்ள அந்தத் தீண்டாதாரையும் தொடுவேன்; இன்று அப்படி செய்ய முடியவில்லை என்றால் பட்டினி கிடப்பேன் என்று விரதம் பூணுங்கள். பொது இடத்தில் ஒரு தீண்டத்தகாத சகோதரனைத் தொட்டு அணைப்பதன் மூலம், இந்து சமுதாயத்தை தீண்டாமை என்னும் பெரிய சாபத்திலிருந்து விடுவிப்பதற்கான வரத்தின் ஒரு துளியை நீங்கள் பெறுகிறீர்கள்!  மற்ற எல்லாருக்கும் போல அவர்களுக்கும் உங்கள் வீடுகளையும், கிணறுகளையும் திறந்து வையுங்கள். பொதுவில் ஒரு தீண்டாத சகோதரனுடன் இப்படி ஒட்டி உறவாடாமல் உங்களது ஒரு நாள் கூட கழியக் கூடாது”. [3]
தங்களது உரிமைகளைக் கோரியும், தங்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளைத் தட்டிக் கேட்டும் தாழ்த்தப் பட்டவர்கள் நடத்தும் அனைத்து சிவில் போராட்டங்களும் முற்றிலும் நியாயமானவையே என்று தனது நூல்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் சாவர்க்கர்.
இந்துத்துவ அரசியலுக்கு ஆள் சேர்ப்பதற்காகவே இந்த சமுதாய சமத்துவ கருத்துக்களை சாவர்க்கர் முன்வைத்தார் என்ற விமர்சனம் அர்த்தமற்றது. அவரது சிந்தனையின் பின் நின்றது அறிவார்ந்த மானுட நேயம் மட்டுமே.
“நமது மதத்தைச் சார்ந்த 7 கோடி மக்களை மிருகங்களுக்கும் கீழாக நடத்துவது மானுடத்தின் மீதான களங்கம் மட்டுமல்ல. நமது ஆத்மாவின் மீது படிந்துள்ள களங்கமாகும். அதனால் தான் தீண்டாமையும் சாதியமும் வேரோடு அழிக்கப் படவேண்டும் என நான் நம்புகிறேன். ஆம், இந்து சமுதாயத்தின் நலனுக்காக அது ஒழிய வேண்டும் தான். ஆனால், இந்தப் பழக்கத்தினால் இந்து சமுதாயத்திற்கு ஏதேனும் கொஞ்சம் பலன் உண்டு என்று இருந்தாலும் கூட, இதே தீவிரத்துடன் அதை நான் எதிர்த்திருப்பேன். ஏனென்றால் மற்றொரு மனிதனை அவனது பிறப்பைக் காரணம் காட்டி அவமதிப்பது என்பது மனித குலத்துக்கே எதிரான குற்றம்.. அந்தக் குற்றத்தை ஒழிப்பதே தர்மத்திக்கும், நீதிக்கும், மனிதப் பண்புக்கும் உகந்த செயலாகும்”
என்று உறுதிபடக் கூறுகிறார் [4].
இனமேன்மை, பிறப்பு அடிப்படையிலாத சாதி மேன்மை போன்ற கருத்தாங்களை அறிவியல், மதம் என்று பல்வேறு புனிதப் பூச்சுகளுடன் நியாயப் படுத்துபவர்களை நோக்கி, சாட்டையடி போல கீழ்க்கண்ட வாசகங்களை சாவர்க்கர் எழுதுகிறார் -
“மொத்தத்தில், உலகம் முழுவதும் ஒரே இனம் தான் உள்ளது. மனித இனம். மனித ரத்தம் என்ற ஒரே பொது ரத்தப் பிணைப்பால் அது வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்குப் புறம்பான மற்ற வாதங்கள் அனைத்தும், தற்காலிகமானவை. அவை முழுமையான உண்மைகள் அல்ல. ஒரு இனத்திற்கும் மற்றொரு இனத்திற்கும் நடுவில் நீங்கள் போடும் செயற்கையான தடைகளை எல்லாம் இயற்கை உடைத்து எறிந்து கொண்டே இருக்கிறது. ரத்தக் கலப்பு ஏற்படுவதைத் தடுப்பது என்பது மணலில் கோட்டை கட்டுவது போன்றது. பாலியல் ஈர்ப்பு என்பது எல்லா தீர்க்கதரிசிகளின் புனித ஆணைகளையும் விட வலிமையானது என்பதை காலம் தொடர்ந்து நிரூபித்து வந்திருக்கிறது… ஒவ்வொரு மனிதரின் நரம்புகளிலும் மனிதகுலத்தின் ரத்தம் முழுவதும் உள்ளது என்பதை மட்டுமே நாம் சந்தேகத்திற்கு இடமின்றி சொல்ல முடியும்.  வடதுருவம் முதல் தென் துருவம் வரை மானுடத்தின் அடிப்படை ஒற்றுமை என்பதே சத்தியம். மற்றவை அனைத்தும் சார்பு நிலைகள் மட்டுமே” [5] 
ரத்னாகிரியில் காவலில் வைக்கப் பட்டிருந்த காலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்பதால் தான் சமூக சீர்திருத்த்த்தில் சாவர்க்கர் கவனம் செலுத்தினார் என்று சொல்லப் படும் விமர்சனமும் ஆதாரமற்றது. “ஹிந்துஸ்தானத்தின் மீது படர்ந்திருக்கும் அன்னிய ஆட்சியைக் கண்டு கொதித்து எப்படி அதற்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டேனோ, அதே போல, சாதிப் பாகுபாடுகளையும் தீண்டாமையையும் எதிர்த்தும் நான் புரட்சி செய்ய வேண்டும்” என்று 1920ல் அந்தமான் சிறையிலிருந்து எழுதிய கடிதத்தில் சாவர்க்கர் குறிப்பிடுகிறார்.
சிறையில் சாவர்கர்
1937ல் காவல் தண்டனை முடிந்ததும் ஹிந்து மகா சபையில் முழுமையாக இணைந்தார் . அக்கட்சிக்கான அரசியல் சுற்றுப் பயணங்கள் எல்லாவற்றிலும் தவறாமல் தாழ்த்தப் பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்றார் சாவர்க்கர். விநாயக சதுர்த்தி விழாக்களில் தாழ்த்தப் பட்டவர்களை அழைத்து மற்ற அனைவரோடும் அமர வைத்தால் மட்டுமே அந்த விழாவில் வந்து உரையாற்றுவேன் என்று நிபந்தனை விதித்தார். 1937 பிப்ரவரியில் வங்கத்தில் குல்னா என்னுமிடத்தில் நடந்த இந்து மாநாட்டில் சமுதாய சமத்துவத்தை வலியுறுத்திப் பேசியதுடன், அங்கிருந்த நாமசூத்திரர்கள். பட்னிகள், பங்கி சமூகத்தினர் ஆகியோர் வீடுகளுக்குச் சென்று அனைவருடனும் உணவருந்தினார். 1939ல் பீகாரில் நடந்த தீண்டாதார் மாநாட்டில் கலந்து கொண்டார். 1944ம் ஆண்டு தொண்டர்கள் அவரது பிறந்த நாள் விழாவை விமர்சையாகக் கொண்டாடத் திட்டமிட்ட போது, தீண்டாமை ஒழிப்பு நாளாக அதை அனுசரிக்குமாறு கேட்டுக் கொண்டார். “இந்து சமுதாயத்தை சீர்ப்படுத்த தீண்டாமை அழிந்தால் மட்டும் போதாது இன்றைய சாதிமுறையே முழுமையாக அழிய வேண்டும். இதனை உணர்ந்த வெகு சிலருள் நீங்களும் ஒருவர் என்பதனை அறிய எனக்கு ஆனந்தமாக இருக்கிறது.” என்று வீர சாவர்க்கருக்கு எழுதிய கடிதத்தில் டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.  அவர் நடத்திய ‘ஜனதா’ பத்திரிகையில் தாழ்த்தப் பட்டவர்களுக்காக சாவர்க்கர் செய்யும் பெரும்பணிகளைக் குறிப்பிட்டு ‘புத்தருக்கு ஒப்பான பெரியவர்’  என்றும் அம்பேத்கர் பாராட்டினார்.
வீர சாவர்க்கரின் கீழ்க்கண்ட பிரகடனம் எப்படி அவரது  உள்ளத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் இந்து ஒற்றுமையும் சமுதாய சமத்துவமும் நிறைந்திருந்தன என்று காட்டுகிறது.
“எனது வாழ்நாளில் இந்து சமுதாயத்திலிருந்து தீண்டாமை என்ற இந்தக் கொடும்பாவம் முற்றாக ஒழிந்து போவதைக் காண்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.. நான் இறக்கும் போது, எனது சடலத்தை தேண்ட்களும், டோம்களும் (தாழ்த்தப் பட்ட சமூகத்தினர்), பிராமணர்களும் பனியாக்களும் சேர்ந்து சுமந்து வந்து, ஒன்றாக இணைந்து எரியூட்ட வேண்டும். அப்போது தான் என் ஆத்மா சாந்தியடையும்” [6]
இந்த சீரிய சிந்தனைகளுக்கு சற்றும் குறையாமல்  இருந்தன சாவர்க்கரின் அதிரடியான களப்பணிகள். அவற்றை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
(தொடரும்)
இந்தக் கட்டுரைக்கான அனைத்து தகவல்களையும் தந்து உதவிய http://www.savarkar.org/ இணையதளத்திற்கு நன்றி.
சான்றுகள்:
[1] 1935, Ksha kirane or X-rays, Samagra Savarkar vangmaya (SSV)  3:178
[2] 1935, SSV 3:497-499
[3] 1935, Hindutvache panchapran or The Spirit of Hindutva, SSV 3: 81
[4] 1927, SSV 3: 483
[5] Essentials of Hindutva, p.30
“After all, there is throughout this world so far as man is concerned but a single race, the human race, kept alive by one common blood, the human blood. All other talk is at best provisional, a makeshift and only relatively true. Nature is constantly trying to overthrow the artificial barriers you raise between race and race. To try to prevent the commingling of blood is to build on sand. Sexual attraction has proved more powerful than all the commands of all the prophets put together… Truly speaking all that one can claim is that one has the blood of all mankind in one’s veins. The fundamental unity of man from pole to pole is true, all else only relatively so.”
[6] Balarao Savarkar; Hindu Samaj Sanrakshak Savarkar, Veer Savarkar Prakashan; Mumbai; 1972, p.67

நன்றி- http://www.tamilhindu.com

Wednesday 18 December 2013

“என்ன, இந்தியர்கள் இரும்பு  எஃகு தயாரிக்கப் போகிறார்களா? அப்படி மட்டும்  நடந்து விட்டால், அவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு இரும்புத் துண்டையும் சாப்பிடுவேன் என்று பந்தயம் வைக்கிறேன்” – 1907ஆம் ஆண்டு இப்படிச் கூறியவர் சர் ஃபிரடெரிக் அப்காட். அப்போதைய பிரிட்டிஷ்  இந்திய  ரயில்வே துறைத் தலைவர். அந்த சவாலை ஏற்றார் பாரத மண்ணின் மைந்தர் ஜாம்ஷெட்ஜி டாடா. உலகத் தரம் வாய்ந்த இரும்பாலைகளை இந்தியாவில் வெற்றிகரமாக நிறுவினார்.  காலச் சக்கரம் சுழன்றது. 2007ம் ஆண்டு கோரஸ் என்ற ஐரோப்பாவின் மிகப் பெரிய இரும்புத் தொழில் நிறுவனத்தை பல பன்னாட்டு நிறுவனங்களை ஏலத்தில் தோற்கடித்து இந்தியாவின் டாட்டா குழுமம் வாங்கியது. உலகின் முதல் 5 இரும்புத் தொழில் நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடித்தது.
“இந்தியாவாவது, ஒரு தேசமாக நீடிப்பதாவது? இன்னும் பத்தே வருடங்கள். உள்நாட்டுப் போர்களில் சிதறி சின்னாபின்னமாகப் போகிறது. அப்போது இந்த அடிமைகள் அவர்களைக் கட்டி வைத்து ஆண்ட நம்மைப் பற்றி நினைத்துக் கொள்வார்கள்” – 1947ல் இந்தியாவை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் எல்லா அதிகாரிகள் மனதிலும் இந்த எண்ணம் தான் இருந்தது. பலருக்கு அதுவே உள்ளக் கிடக்கையாகவும் இருந்தது.
அதைப் பொய்யாக்குவதற்கு ஒரு இரும்பு மனிதரை பாரத மாதா ஈன்றெடுத்திருந்தாள். சர்தார் வல்லபாய் படேல். 565 சமஸ்தானங்ளையும் ஒரு தேசமாக இணைக்க வேண்டிய மலைக்க வைக்கும் பணி. இந்தப் பணியில் சாம, தான, பேத, தண்டம் என்று இந்திய மரபு கூறும் நான்கு வழிகளையும் பயன்படுத்தினார் அவர்.  இந்தியா எனும் ஒருங்கிணைந்த நவீன தேசத்தின் சித்திரத்தை உலக வரைபடத்தில் அழுத்தமாக இடம் பெறச் செய்தார். ஹைதராபாத்,  ஜுனாகட் மாகாணங்களை அவர் இந்திய யூனியனுடன் இணைத்த விதம், உலகின் மாபெரும் அரசியல் ராஜதந்திர சாணக்கியர்களும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு இருந்தது. “சர்தார்” என்ற ஹிந்தி திரைப்படம் அந்த சரித்திரத்தை சமீப காலங்களில் நமக்கு நினைவூட்டியது.
சட்ட நுணுக்கங்களில் தேர்ந்த வெற்றிகரமான வழக்கறிஞராக தன் இளமைக் காலத்தைத் தொடங்கிய படேல், அதைத் துறந்து கேடா, பர்டோலி சத்தியாக்கிரகங்களின் ஊடாக விவசாயிகளின், வனவாசிகளின் தோளோடு தோள் நின்று போராடும் மக்கள் தலைவராக ஆனார். 1931க்குப் பின் காங்கிரஸ் கட்சியை அதன் மிகச் சிக்கலான வரலாற்றுத் தருணங்களில் வழி நடத்தினார். அழிக்கப் பட்ட சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் நிர்மாணிப்பதில் பெரும் பங்காற்றினார். அகமதாபாத் நகராட்சித் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர் என தான் வகித்த அத்தனை பதவிகளுக்கும் பெருமை சேர்த்தார். நேர்மைக்கும், மன உறுதிக்கும், நல்லாட்சிக்கும், நிர்வாகத் திறனுக்கும் இன்றளவும் நினைவு கூரப் படும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.
அவரது நினைவை என்றென்றைக்குமாக நிலை நிறுத்தும் வகையில் 182 அடி உயரமுள்ள சர்தார் படேலின் இரும்புச் சிலையை இந்திய ஒற்றுமைச் சின்னமாக நிறுவ குஜராத் அரசு முடிவு செய்து அடிக்கல்  நாட்டியிருக்கிறது. குஜராத் மாநிலம் கேவடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிப் படுகையில் உள்ள ஒரு தீவில், சர்தார் சரோவர் அணைக்கட்டுகளை நோக்கி கம்பீரமாக நிற்கப் போகிறது இச்சிலை. அமெரிக்காவின் சுதந்திர தேவி போன்ற புகழ்பெற்ற சிலைகளை விஞ்சும் வகையில் உலகிலேயே மிகப் பெரிய சிலையாக இது இருக்கும். இந்த சிலை அமைப்புத் திட்டம், ஏதோ மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்து காண்டிராக்ட் கொடுத்து பணிகளை முடித்து திறப்பு விழா நடத்தும் சம்பிரதாயமான பொதுப்பணித் துறை சமாசாரம் அல்ல. இதை முன்வைத்து  தேசிய ஒற்றுமை குறித்த மாபெரும் விழிப்புணர்வை இந்தியா முழுவதும் உருவாக்க வேண்டும் என்பதும் இதற்காகப் பொறுப்பேற்றுள்ள சர்தால் படேல் தேசிய ஒற்றுமை அறக்கட்டளையின் முக்கிய நோக்கம்.


ஒவ்வொரு கிராமத்தின் மண்ணும், அந்த மண்ணின் விவசாயிகளின் பயன்பாட்டில் இருந்த இரும்புத் துகள்களும் சேகரிக்கப் படும். அந்த மண் ஒற்றுமைச் சிலையின் பீடமாகும். அந்த இரும்புத் துகள்கள் உருகி, இறுகிப் பிணைந்து இந்தியாவின் இரும்பு மனிதரின் சிலை உருக்கொண்டு எழும். படேல் நினைவு நாளான டிசம்பர் 15 அன்று இந்த தேசிய ஒற்றுமை இயக்கம் வெற்றிகரமாகத் தொடங்கி இருக்கிறது.
முதல் கட்டமாக, டிசம்பர் 15 அன்று இந்தியாவின் 565 இடங்களில் “ஒற்றுமை ஓட்டம்” நடத்துவதாகத் தீர்மானிக்கப் பட்டது. ஆனால் இந்த இயக்கத்தின் உற்சாகம் நாடெங்கும் பா.ஜ.க தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் திட்டமிட்டதை விடப் பெரிதாக, தீயாகப் பற்றிக் கொண்டது.  நேற்று குஜராத் மாநிலம் வதோதராவில், நரேந்திர மோடி கொடியசைத்து ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இதில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.  தமிழகத்திலும் பல இடங்களில் ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றுள்ளது.
2014 மார்ச் மாதம் வரை இந்த இயக்கத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற உள்ளன.  பா.ஜ.க  தொண்டர்கள் 1,87,000 ஊராட்சி ஒன்றியங்களைத் தொடர்பு கொண்டு சிலைக்கான மண்ணையும் இரும்புத் துகள்களையும் சேகரிக்க இருக்கின்றனர். இதற்காக,  ஒவ்வொரு ஊரையும் அடையாளப் படுத்தும் உபகரணங்களுடன் (tracking devices) கூடிய விசேஷ பெட்டிகள் வடிவமைக்கப் பட்டுள்ளன.  இந்த இயக்கத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கோரி நரேந்திர மோதி எழுதிக் கையெழுத்திட்ட கடிதம் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கும் பாஜக தொண்டர்களால் வழங்கப் படும். 3 லட்சத்திற்கும் மேலான பள்ளிகளும் தொடர்பு கொள்ளப் படும்.
இந்த இயக்கத்தில் இணையும் அனைத்து கிராமங்களின் புகைப்படங்களையும் கோர்த்து ஒரு பிரம்மாண்டமான படத்தொகுப்பு (collage) உருவாக்கப் படும்.   ஒவ்வொரு கிராமத்தினரும் கையெழுத்திட்ட பதாகைகள் 80 கிமீ நீளமுள்ள நீண்ட துணியில் இடம் பெறும். இவை ஒற்றுமை சிலை வளாகத்தில் அமைய இருக்கும் அருங்காட்சியகத்தில் வைக்கப் படும்.
“இதுவரை மோதி மக்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார். இப்போது மக்கள் மோதியின் கோரிக்கையின் பேரில் தேச ஒற்றுமைக்காக ஓடப் போகிறார்கள். இது எத்தகைய எழுச்சியை உருவாக்கும் என்று உணர்கிறீர்களா?” என்று கேட்கிறார் சமூகவியலாளர் ஷிவ் விஸ்வநாதன். இந்த இயக்கம் உருவாக்கும் மாபெரும் மக்கள் தொடர்பு சாத்தியங்களால் காங்கிரஸ் கிலி அடைந்துள்ளது. ”படேல் சிலையை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறது  பாஜக” என்று புலம்புகிறார்கள் காங்கிரஸ் தலைகள். நேரு குடும்பத்தையும் அதன் சமீபத்திய தயாரிப்பான முட்டாள் இளவரசனையும் வைத்து அரசியல் செய்வது இனிமேலும் எடுபடாது என்ற விஷயம் காங்கிரசுக்கு எப்போது தான் உறைக்குமோ தெரியவில்லை.

உண்மையில் சுதேசி இயக்கமும் காங்கிரசும் விடுதலைப் போராட்ட காலங்களில் உருவாக்கிய மக்கள் தொடர்பு சாதனங்கள் தான் இவை. 1800களின் இறுதியில் சுதேசி கண்ணாடி தயாரிப்பு தொழிற்சாலை நிறுவுவதற்கான நிதியைத் திரட்ட, பால கங்காதர திலகர் கிராமம் தோறும் சென்று மக்களிடம் ஒரு பைசா வசூலித்தார்.  இந்தியர்கள் சுயமாக ஒரு சுதேசி உயர்கல்வி நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பினார் மதன் மோகன் மாளவியா.  ஒவ்வொரு நகரிலும் சென்று அங்குள்ள பிரபுக்களிடமும் பொதுமக்களிடமும் விதவிதமாக இறைஞ்சி  சில்லறைகள் சேர்த்து புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தை நிறுவினார். 1960களில் கன்யாகுமரியில் விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம் அமைப்பதற்காக தேசம் முழுவதும் ஒரு ரூபாய் நன்கொடை அட்டைகளின் மூலம் விவேகானந்த கேந்திரம் நிதி திரட்டியது. இவற்றின் மூலம் குறிப்பிட்ட திட்டம் நிறைவேறியது மட்டுமல்லாமல் தேசபக்தியும் தேசிய ஒருமைப் பாட்டு உணர்வும் பரவின என்பது வரலாறு. புதிய வரலாற்றைப் படைக்கப் போகும் தேசிய நாயகர் நரேந்திர மோதியின் தலைமையில் இந்த இயக்கம் தொடங்கியிருப்பது இயல்பானதே.
கட்சி சார்புகள் கடந்து, ஒவ்வொரு இந்தியரும் சர்தார் படேலின் நினைவைப் போற்றும், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த இயக்கத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

நன்றி- http://www.tamilhindu.com/2013/12/run4unity/

Tuesday 17 December 2013